நான் 6 மாத கர்ப்பமாக இருக்கிறேன். இதுவரை எனக்கு சருமத்தில் பருக்களோ, கருந்திட்டுகளோ வந்ததில்லை. ஆனால் கர்ப்பமான பிறகு முகத்திலும் உடலின் சில பகுதிகளிலும் கருந்திட்டுகள் காணப்படுகின்றன. இது எனக்கு கவலையாக இருக்கிறது. கர்ப்ப காலத்தில் சரும பிரச்னைகளுக்கு சிகிச்சைகள் எடுக்கலாமா? இந்தக் கரும்புள்ளிகளைப் போக்க என்ன வழி?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்
கர்ப்ப காலத்தில் முகம் மற்றும் உடலின் பிற பகுதிகளில் இது போன்று கருந்திட்டுகள் வருவது இயல்புதான். இதை ஆங்கிலத்தில் ‘பிக்மென்ட்டேஷன்’ என்று சொல்வோம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றத்தால் இப்படி ஏற்படும். இது குறித்து கவலைகொள்ளத் தேவையில்லை.முடிந்தவரை சருமத்துக்கு நிறைய மாய்ஸ்ச்சரைசரும் சன் ஸ்கிரீனும் உபயோகியுங்கள்.
கர்ப்ப காலத்தில் தேவையற்ற சரும சிகிச்சைகளைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது. அதேபோல கெமிக்கல் கலந்த அழகுசாதன பொருள்களை உபயோகிப்பதையும் தவிர்க்கவும். அஸீலிக் அமிலம் (Azelaic acid ) கர்ப்ப காலத்தில் உபயோகிக்கப் பாதுகாப்பானது. எனவே உங்களுக்கு பருக்களோ, கருந்திட்டுகளோ இருந்தால் சரும மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அஸீலிக் அமிலம் உள்ள க்ரீம் அல்லது சீரம் பயன்படுத்தலாம். இதை தினமும் இரவில் பயன்படுத்தலாம். பகல்வேளைகளில் மாய்ஸ்ச்சரைசரும் சன் ஸ்கிரீனும் உபயோகிக்கலாம்.
கர்ப்ப காலத்தில் அதிக எடை கூடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள கருந்திட்டு பிரச்னை ரொம்பவும் அதிகமாக இருப்பதாக உணர்ந்தால் உங்களுக்கு சர்க்கரைநோய் இருக்கிறதா என்பதையும் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும்.
மற்றபடி கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் இந்தக் கருந்திட்டு பிரச்னை, பிரசவமான சில மாதங்கள் கழித்து தானாக மறைந்து விடும் என்பதால் கவலை வேண்டாம்.