Doctor Vikatan: ஐஸ்கிரீம் சாப்பிட்டதும் வெந்நீர் குடித்தால் சளி பிடிக்காது என்பது உண்மையா? அதேபோல பிரியாணி உள்ளிட்ட பலமான விருந்துக்குப் பிறகு வெந்நீர் குடித்துவிட்டால் உடலில் கொழுப்பு சேராது என்பது எந்த அளவுக்கு உண்மை?
பதில் அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் மருத்துவர் அஷ்வின் கருப்பன்.
ஐஸ்கிரீம் சாப்பிட்டதும் வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் பிடிக்காது என்பதற்கு விஞ்ஞானபூர்வமாக எந்த ஆதாரமும் கிடையாது. நம்முடைய வாயில் இயல்பிலேயே வைரஸ் கிருமிகள் இருக்கும். வாயிலுள்ள உமிழ்நீர் மூலமாக அவை செயலிழந்து இருக்கலாம். குளிர்ச்சியான உணவுகளையோ, குளிர்ச்சியாகவோ சாப்பிடும்போது அந்த வைரஸ் கிருமிகள் தூண்டப்பட வாய்ப்புகள் அதிகம். அதனால் சளி பிடிக்கும்.
ஐஸ்கிரீம் சாப்பிட்டதும் வாய் கொப்பளிப்பதால் வாய் சுத்தமாகலாம், தொண்டைக் கரகரப்புக்கு இதமாக இருக்கலாம். அவ்வளவுதானே தவிர, ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் சளி பிடிக்காமலிருக்க வெந்நீர் எந்த வகையிலும் உதவாது.