என் வயது 23. தினமும் இருவேளைகள் குளிக்கிறேன். ஆனாலும் என் உடலில் வியர்வை வாடை இருக்கிறது. எவ்வளவு வாசனையான சோப் பயன்படுத்தினாலும், பெர்ஃபியூம் உபயோகித்தாலும் அதையும் தாண்டி வியர்வை வாடை வீசுகிறது. இதற்கு என்ன காரணம்? சிகிச்சை உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா…
உங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் பிரச்னையை ‘ஸ்வெட் ரிட்டென்ஷன் டெர்மடைட்டிஸ்’ (sweat retention dermatitis) என்று சொல்வோம். வியர்வையில் இயல்பிலேயே பாக்டீரியாவும் இருக்கும்.
காட்டன் துணிகள் அணியும் போது வியர்வை உறிஞ்சப்படும். மாறாக சிந்தெடிக் உடைகள் அணியும்போது வியர்வை உறிஞ்சப்படாமல் இருப்பதால், சருமத்தில் நீண்ட நேரம் இருக்கிறது. அத்துடன் பாக்டீரியாவும் அங்கே இருக்கிறது. அதனால்தான் பாக்டீரியா தொற்று வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது

நீங்கள் இரு வேளைகள் குளிப்பதாகக் குறிப்பிட்டிருப்பது மிக நல்ல விஷயம். வாசனை சோப் உபயோகிப்பதற்கு பதிலாக நீங்கள் ஆன்டி பாக்டீரியல் சோப் பயன்படுத்தத் தொடங்கலாம். வியர்வை வாடையைத் தவிர்க்க, ரோல் ஆன் அல்லது டியோடரன்ட் உபயோகிப்பது சரியானதல்ல.
அவற்றுக்கு பதில் நீங்கள் ஆன்டி பாக்டீரியல் அல்லது ஆன்டி ஃபங்கல் பவுடர் உபயோகிக்கலாம். இவற்றை உபயோகிக்கும்போது உடலில் வியர்வை தேங்காமல் சருமம் ஈரப்பதமின்றி இருக்கும்.
மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் உங்கள் உடை. காற்றோட்டமுள்ள, தளர்வான, காட்டன் உடைகளையே அணிய வேண்டும். தினமும் இருவேளைகள் குளிக்க வேண்டும். குளிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் உங்கள் உடைகள், உள்ளாடைகளை மாற்ற வேண்டியதும் முக்கியம்.

இவற்றையெல்லாம் செய்தும் கட்டுப்படாத வியர்வை என்றால் போடாக்ஸ் சிகிச்சை உங்களுக்குப் பலனளிக்கலாம். உள்ளங்கை, அக்குள், பாதம் என உங்களுக்கு உடலின் எந்தப் பகுதியில் அதிக வியர்வை இருக்கிறதோ, அங்கு போடாக்ஸ் சிகிச்சை கொடுக்கப்படும்.
சரும மருத்துவரை அணுகினால், உங்களுடைய பிரச்னையை முழுமையாக ஆராய்ந்து, அதற்கான காரணம் அறிந்து, தேவையான சிகிச்சையைப் பரிந்துரைப்பார். போடாக்ஸ் சிகிச்சை தேவைப்பட்டால் அது குறித்தும் உங்களுக்கு விளக்குவார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.