இன்று பக்கெட் பிரியாணி, ஒருகிலோ பிரியாணி என்றெல்லாம் விற்கப்படுகிறது. அதையெல்லாம் அளவுக்கு மீறி ஒருவர் சாப்பிடுவது மிகவும் தவறானது. அதில் சேர்க்கப்படுகிற அரிசி, இறைச்சி, எண்ணெய் என எல்லாமே அளவு மீறும்போது உடல்நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
எப்போதுமே ஃப்ரெஷ்ஷாக சமைத்த பிரியாணிதான் ஆரோக்கியமானது. ஏற்கெனவே சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்து மறுபடி சூடுபடுத்தப்பட்ட பிரியாணி நிச்சயம் ஆரோக்கியக் கேட்டை ஏற்படுத்தும்.
நள்ளிரவு பிரியாணி, அதிகாலை பிரியாணி எல்லாம் இப்போது டிரெண்டாகி வருகின்றன. அந்த நேரத்தில் நம் செரிமான மண்டலமானது தயாராக இருக்காது. இரவு முதல் அடுத்த நாள் காலை வரை நம் செரிமான மண்டலத்துக்கு ஓய்வு வேண்டும். அதனால்தான் இரவு உணவையே தூக்கத்துக்கு இரண்டு மூன்று மணி நேரம் முன்னதாக முடித்துக்கொள்ளச் சொல்கிறோம்.
ஒருவேளை பணிச்சூழல் காரணமாக அந்த நேரத்தில்தான் சாப்பிட வேண்டும் என்றவர்கள், அடுத்த நாள் மாலை வரை எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். இரவு பிரியாணி சாப்பிட்டுவிட்டு, மறுநாள் காலை இட்லி, தோசை, வடை என வயிறு முட்ட சாப்பிடுவது மிகவும் தவறு.
பிரியாணி சாப்பிடுவதால் இறப்பு நிகழ வாய்ப்பில்லை. அசைவ பிரியாணியாக இருந்து, அந்த எலும்பு தொண்டையில் சிக்கினால், அதன் காரணமாக இறப்பு நிகழலாம். அந்த அசைவத்தில் நச்சுத்தன்மை இருந்தாலும் அப்படி நிகழலாம். மற்றபடி பிரியாணிக்கும் இறப்புக்கும் தொடர்பில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.