“தனக்கும் தோனிக்கும் டையே நடந்த நேரடி உரையாடலை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்” என்று `செஃப்’ சுரேஷ் பிள்ளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். தோனியுடனான அவருடைய அனுபவங்கள் பற்றி அவர் பகிர்ந்த சுவாரஸ்ய விஷயங்கள் இங்கே.

“அக்டோபர் 31, 2018. இந்திய அணி வீரர்கள் திருவனந்தபுரத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் விளையாடிக் கொண்டிருந்த சமயம். நான் பணிபுரிந்த ஓட்டலில்தான் அத்தனை வீரர்களும் தங்கியிருந்தனர். ஒரு நாள் பேருந்தில் இருந்து அனைவரும் இறங்கிய போது என் கண்கள் மட்டும் தோனியை தேடின. பின் வீரர்கள் அனைவரும் அறைக்கு சென்று ஓய்வு எடுத்துவிட்டு இரவு உணவை 7 மணியளவில் ஆர்டர் செய்தனர். ஆனால் தோனி தனது இரவு உணவை 9. 30 மணிக்கு ஆர்டர் செய்தார்.
அந்த சமயத்தில் லிஃப்டுக்குக் கூட காத்திருக்காமல், மூன்றாவது மாடியில் உள்ள அவரது அறைக்கு ஓடோடி சென்றேன். நான் கதவை தட்டி உள்ளே சென்றபோது, ‘ஹாய் செஃப்! எப்படி இருக்கீங்க? இரவு உணவிற்கு என்ன இருக்கிறது?’ என்று ஹிந்தியும் தமிழும் கலந்து தோனி கேட்டார். நான் அவரிடம் கடல் சார்ந்த உணவுகள் சிலவற்றின் பெயரை குறிப்பிட்டு அவை இருக்கிறது என்றேன். ‘என்னால் கடல் உணவுகளை சாப்பிட முடியாது. எனக்கு கடல் உணவுகளென்றால் அலர்ஜி’ என்றார் தோனி.

பின் ‘சிக்கன் கறி மற்றும் சாதம் கிடைக்குமா? எனக்கு தொண்டை வலியாக இருப்பதால் கொஞ்சம் காரமான பூண்டு ரசமும் கிடைக்குமா?’ என்று தமிழிலேயே கேட்டார். சுமார் 20 நிமிடங்களில், செட்டிநாடு சிக்கன், பாசுமதி சாதம், பப்படம் மற்றும் பூண்டு ரசத்தை அவரது அறைக்குக் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வந்தேன். மறுநாள் காலையில் ஜிம்மிற்குச் செல்லும் வழியில் என்னைப் பார்த்த அவர் `இரவு உணவு நன்றாக இருந்தது’ என்று சொன்னார்.
அப்போது நான் விண்ணில் பறப்பதைப் போல உணர்ந்தேன். அந்த உணர்வை வேறெதுவும் மிஞ்சிட முடியாது. 4 நாட்கள் மட்டுமே அவர் அங்கு தங்கி இருந்தாலும், என்னுடைய கரியரில் அந்த தருணைத்தை மறக்கவே முடியாது.

உங்களுக்கு மீண்டும் சேவை செய்ய காத்திருக்கிறேன், தோனி!” என்று தோனியுடனான அழகான தருணங்களை செஃப் சுரேஷ் பிள்ளை பகிர்ந்திருக்கிறார். இது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.