கடந்த 2021 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு கூட முன்னேறியிருக்கவில்லை. முதல் போட்டியிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி அடைந்திருந்தனர். அந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணியின் ஓப்பனர்கள் ஷாகீன் ஷா விடம் சிக்கி சின்னாபின்னமாகி தோல்விக்கு வழிவகுத்திருந்தனர்.
அதே 2021 இல் ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும் நடந்திருந்தது. அதிலும் இந்திய அணி நியுசிலாந்திடம் தோற்றிருந்தது.
முக்கியமான போட்டி ஒன்றில் ஓப்பனர்கள் சரியாக ஆடிக் கொடுக்கும் போது அது அணிக்கே ஒரு மிகப்பெரிய பாசிட்டிவிட்டியை கொடுக்கும். மேலும், தொடக்கத்திலேயே எதிரணியை அழுத்தத்திற்குள்ளாக்கும் போது அவர்களின் கையிலிருக்கும் திட்டங்கள் அத்தனையும் குலைந்து போகும். எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்கிற விரட்டுதல் அழுத்தம் அவர்கள் மீது தொற்றிக் கொள்ளும். ஆனால், இந்திய அணியின் ஓப்பனர்கள் கடந்த 10 ஆண்டுகளில் இதை செய்யவே இல்லை. குறிப்பாக, இந்த உலகக்கோப்பையில் அரையிறுதி மட்டுமில்லை. முதல் போட்டியிலிருந்தே சொதப்பல்தான். எல்லா போட்டியிலும் கோலியோ சூர்யகுமாரோ வந்து காப்பாற்றிக் கொண்டே இருக்க முடியாதே!
மேலே குறிப்பிட்ட அத்தனை ஐ.சி.சி நாக் அவுட் போட்டிகளிலும் ரோஹித்தான் இந்திய அணியின் ஓப்பனராக இருந்திருக்கிறார். இருதரப்பு தொடர்களிலும் பெரிய தொடர்களின் லீக் போட்டிகளிலும் மட்டுமே சிறப்பாக ஆடுவது முக்கியமில்லை.