ஆஸ்திரேலியாவின் ஓப்பனர் மூனேவின் அதிரடி ஆரம்பம்தான் அவர்களுக்கான சிறப்பான தொடக்கமாக அமைந்தது. பவர்பிளேயிலேயே 48 ரன்களை அவர்களது தரப்பு சேர்க்க, இந்திய அணியோ ஆறாவது ஓவரைக் கழித்துப் பார்த்தால் பவர்பிளேயில் முதல் ஐந்து ஓவர்களில் வெறும், 28 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. அதிரடி ராணியான ஷஃபாலியும் சரி, அனுபவம் மிகுந்த ஸ்மிரிதியும் சரி, பொறுப்பற்ற முறையில் தங்களது விக்கெட்டைப் பறிகொடுத்திருந்தனர். இந்த ஓப்பனிங் தள்ளாட்டம்தான் இந்தியாவிடமிருந்து போட்டியைக் கைமாற்றியது.
ஆனாலும் இருபக்கமுமே இரு முக்கிய பார்ட்னர்ஷிப்கள் போட்டிக்கு சுவாரஸ்யம் சேர்த்திருந்தன. மூனே மற்றும் கேப்டன் லானிங்கிற்கு இடையே 47 பந்துகள் நீடித்த கூட்டணியில் 74 ரன்களை அதிவேகமாகக் கடந்துவிட்டார்கள். இந்த முதல் பத்து ஓவர்களுக்குள்ளாகவே ஏழு பௌலர்களை ஹர்மன்ப்ரீத் முயன்றிருந்தார். ஆனால், ரன் கசிவையும் தடுக்க முடியவில்லை, விக்கெட்டையும் வீழ்த்த முடியவில்லை.
மூனே ப்ளிக் ஷாட், புல் ஷாட், கவர் டிரைவ் என அவ்வப்போது பந்தோடு பாதுகாப்பு பவுண்டரி வளையத்தைத் தாண்டி இந்தியாவையும் அனுப்பிக் கொண்டிருந்தார். லானிங்கோ சற்றும் தயக்கமின்றி தனது பவர் ஹிட்டிங்கைக் காட்சிப்படுத்திக் கொண்டிருந்தார். ஹர்மன்ப்ரீத் ஓவரில் வந்த ஹாட்ரிக் பவுண்டரிகள் ரன் மீட்டரை தறிகெட்டு ஓட வைத்தன.
இந்தியாவின் பக்கமும் இதே போன்றதொரு பார்ட்னர்ஷிப்தான் போட்டிக்குள் இந்தியாவைக் கொண்டு வந்தது. ஓப்பனர்கள் இருவரையுமே மூன்று ஓவர்களுக்குள் இழந்துவிட்ட இந்தியக் கப்பலை முதலில் மூழ்காமல் தடுத்து நங்கூரமிட்டு பின் மெல்ல மெல்ல இலக்கை நோக்கி எடுத்துச் சென்றனர் ஹர்மன்ப்ரீத் – ரோட்ரிக்ஸ். ஓடியோ அல்லது பவுண்டரிகளாகவோ ஏதோ ஒரு வகையில் ரன்கள் வருவதை உறுதி செய்து கொண்டே இருந்தனர். ஆஸ்திரேலியாவின் அந்தப் பார்ட்னர்ஷிப் போலவே இந்தக் கூட்டணிதான் தடுமாற்றமின்றி ஆடியது. அதிலும் அரைசதம் கடந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத்தின் இன்னிங்ஸ் பொறுமையுடனும் நிதானத்தோடும் மிக அற்புதமாகவும் கட்டமைக்கப்பட்டிருந்தது.