‘சென்னை Vs கொல்கத்தா!’
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் டாஸை கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே வென்றிருக்கிறார். கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுகிறது.

‘மிஸ் யூ ருத்து – தோனி!’
தோனி மீண்டும் சென்னை அணியின் கேப்டனாகியிருக்கிறார். டாஸின் போது தோனி பேசியதாவது, ‘நாங்களும் முதலில் பேட்டிங் செய்யதான் நினைத்தோம். நாங்கள் சில போட்டிகளில் சேஸிங்கை தேர்வு செய்தோம். ஆனால், இரண்டாம் இன்னிங்ஸின் போது காற்றில் பெரிதாக ஈரப்பதம் இருப்பதில்லை. மேலும், ஓப்பனிங்கில் மொமண்டம் கிடைக்கவில்லையெனில், மிடில் ஆர்டர் மீது பெரிய அழுத்தம் ஏற்பட்டு விடுகிறது.
ருத்துராஜ் கெய்க்வாட்டின் முழங்கையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவர் தொடரிலிருந்து விலகியிருக்கிறார். ருத்துராஜ் மாதிரியான வீரரை இழப்பது துரதிஷ்டவசமானதுதான். அவர் ஆடுவதை பார்க்கவே அற்புதமாக இருக்கும். வெறுமென பேட்டை வீசி பெரிய ஷாட்களை ஆடாமல் அழகியலோடு ஆடுவார். ஸ்பின்னர்களை விட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார். அவரை நிச்சயமாக தவறவிடுவோம்.
நாங்கள் நிறைய போட்டிகளை தோற்றுவிட்டோம். இனி அடிப்படையான விஷயங்களை சரியாக செய்ய வேண்டும் என நினைக்கிறேன். குறைவான டாட்களை ஆட வேண்டும். முறையாக கேட்ச்களை பிடிக்க வேண்டும். ஒன்றிரண்டு போட்டிகளை பெரிய வித்தியாசத்தில் தோற்றிருக்கிறோம். மற்றபடி எங்களுக்கும் வெற்றி பெற்ற அணிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

ஒரு 20 ரன் ஓவர் வந்திருந்தாலே போட்டியின் முடிவு மாறியிருக்கும். எங்களின் பேட்டர்கள் பெரிதாக ஸ்லாக் ஷாட்களை ஆடக்கூடியவர்கள் இல்லை. அவர்கள் மரபார்ந்து ஆடக்கூடியவர்கள். அவர்கள் தங்களின் உள்ளுணர்வின் அடிப்படையில் ஆடினால் போதும். தொடக்கத்திலேயே சில பவுண்டரிக்களையும் தொடக்கத்திலேயே சில விக்கெட்டுகளையும் எடுக்க வேண்டும். இன்று எங்கள் லெவனில் அன்ஷூல் கம்போஜூம் ராகுல் திரிபாதியும் இணைகிறார்கள்.’ என்றார்