அர்ஷ்தீப் சிங் விவகாரத்தைப் பொறுத்தவரை, இந்தியாவின் தொழில்நுட்ப அமைச்சர் விக்கிப்பீடியாவில் வெளியான தகவல் ஹேக் செய்யப்பட்டது என்று தெரிவித்திருந்தாலும், போட்டி நடந்த இரவில் ட்விட்டரில் வெளிப்பட்ட கருத்துகள் யாவும் ஹேக் செய்யப்பட்ட கருத்துகள் இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எப்போதும் மதம், சாதி போன்ற விஷயங்கள் மனிதக் குலத்திற்கு அவசியமற்ற ஒன்று. அவற்றின் பேரில் நடக்கும் சமூக அவலங்கள் ஒருபுறமிருக்க, விளையாட்டுகளுக்கு என்று ஒரு தனித்தன்மை உண்டு அவற்றால் எளிதாக மக்களை ஒன்றிணைக்கும் முடியும்.
இலங்கை ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்த போது அந்த மக்களுக்கு அது மகிழ்ச்சியைத் தந்தது. அந்தத் தேசம் தன் துன்பத்தை மறந்து தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்த வாய்ப்பளித்தது. அத்தகைய உணர்வைக் கொடுக்க விளையாட்டால் முடியும். ஆனால், விளையாட்டின் இந்த மேஜிக்கை எளிதாகப் புறந்தள்ளக்கூடியவைதான் நிற, மத, சாதிய பாகுபாடுகள். இவற்றை எல்லாம் தவிர்த்துவிட்டு வாழத்தான் விளையாட்டு என்ற ஒன்றை ஆரம்பித்தனர். ஆனால், இப்போது அவற்றை வைத்தே வீரர்களை எடை போட்டுப் பிரிப்பது பெரும் அவலம்.
அர்ஷ்தீப் சிங் என்ற அந்த ஒரு பெயர் இரண்டு நாளாக இந்திய விளையாட்டுத் துறையில் அதிகம் ஒலிக்கப்பட்ட பெயராகிவிட்டது. அந்தப் பெயர் பல பழைய நினைவுகளையும் கிளறி, இந்தியாவின் தற்போதைய அரசியல் பற்றியும் விவாதிக்கிறது.
அர்ஷ்தீப் சிங்கின் தாய், “இன்னும் 3 – 5 ரன்கள் அதிகமாக இருந்திருந்தால் என் மகன் இந்திய அணியை வெற்றி பெற வைத்திருப்பான். ஆனால், அது நடக்கவில்லை. அவன் இந்திய அணிக்குக் கோப்பையை வென்று தர ஆர்வமாக உள்ளான். அதைச் செய்வான் என நம்புகிறேன்!” – இந்தப் பிரச்னைக்கு பிறகு அவர் உதிர்த்த வார்த்தைகள் எவ்வளவு நம்பிக்கை வாய்ந்தவை! அதற்கான வாய்ப்பு தற்போது இல்லையென்றாலும் வரும் தொடர்களில் அது நிச்சயம் அரங்கேறலாம்.