Ballon d’Or: “இவ்விருதை மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்”- கால்பந்தாட்ட வீரர் கரிம் பென்சிமா! | Karim Benzema dedicates ballon d or award to the people

Share

கால்பந்து உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படுவது Ballon d’Or விருது. பிரான்ஸ் கால்பந்து சங்கத்தால் வருடா வருடம் வழங்கப்படும். இதற்கு முன் இவ்விருதை மெஸ்ஸி அதிகபட்சமாக 6 முறையும், கிறிஸ்டியானோ ரொனால்டோ 5 முறையும் வென்றிருந்தனர்.

இந்த ஆண்டிற்கான (2022) Ballon d’Or விருது நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதிற்காக பென்சிமா, லெவோண்டஸ்கி, கெவின் டி ப்ரூய்ன், முகமது சாலா போன்ற 30 கால்பந்தாட்ட வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான விருதை பிரான்ஸ் நாட்டுக் கால்பந்தாட்ட வீரர் கரிம் பென்சிமா வென்றுள்ளார்.

கடந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணி, சாம்பியன்ஸ் லீக் மற்றும் லா லீகா தொடர்களை வென்றது. அந்த அணிக்காக விளையாடிய அவர் 46 ஆட்டங்களில் 44 கோல்களைப் பதிவு செய்திருந்தார். அதற்காகவே இந்த விருதை இவர் பெற்றுள்ளார்.

“இந்த விருதை எப்படியாவது வெல்ல வேண்டுமென்ற எண்ணம் எனக்குள் இருந்தது. அதை எனது தலைக்குள் ஏற்றிக் கொண்டேன். கடினமான தருணங்களைக் கடந்து வந்துள்ளேன். என்னோடு கிளப் அணியில் விளையாடும் வீரர்கள், அவர்களது நாட்டுக்காகவும் விளையாடி வந்தனர். ஆனால் நானோ அந்நேரத்தில் கிளப் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன். களத்தில் எனது உழைப்பை எண்ணி மகிழ்கிறேன், பெருமை கொள்கிறேன். இவ்விருதை மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று கரிம் பென்சிமா பேசியிருக்கிறார்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com