பார்டர் கவாஸ்கர் தொடரின் இரண்டாவது போட்டியில் ஹெட்டுக்கு எதிராக சிராஜ் ஸ்லெட்ஜ்ஜிங்கில் ஈடுபட்டிருந்தார். இதனால் ஹெட், சிராஜ் என இருவருக்குமே ஐ.சி.சி அபராதம் விதித்திருக்கிறது. ஐ.சி.சியின் நடவடிக்கையை ஹர்பஜன் சிங் இப்போது விமர்சித்திருக்கிறார்.
ஹர்பஜன் பேசியிருப்பதாவது, “ஐ.சி.சி, வீரர்களிடம் கடுமையாக நடந்துகொள்கிறது. இப்படியான விஷயங்களெல்லாம் மைதானத்தில் நடக்கவே செய்யும். இந்த மாதிரி விஷயங்களில் யார் சரி யார் தவறு என்பதை சொல்லவே முடியாது. அடிலெய்டில் நடந்ததை அடிலெய்டிலேயே விட்டுவிட வேண்டும். ஆனால், ஐ.சி.சி க்கென ஒரு குணமுண்டு. அது அதன்படி செயல்பட்டு வீரர்களுக்கு அபராதம் விதித்திருக்கிறது.
இரண்டு வீரர்களும் சமாதானமாகி பேசி கைகுலுக்கி விட்டனர். அதனால் இதையெல்லாம் மறந்துவிட்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும்.” எனக் கூறியிருக்கிறார்.
டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை சிராஜ் வீழ்த்திய போது ஹெட் சிராஜை நோக்கி எதோ சொல்வார். உடனே சிராஜூம் ஆக்ரோஷமாக ரியாக்ட் செய்வார். போட்டி முடிந்த பிறகுதான் தான் ‘Well Bowled’ என்றே சொன்னதாக ஹெட் கூறியிருந்தார்.
ஆனாலும் இருவருக்குமே ஐ.சி.சி அபராதம் விதித்திருக்கிறது. 1-1 என தொடர் சமநிலையில் இருக்கும் போது மூன்றாவது போட்டி பிரிஸ்பேனின் காபாவில் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.