உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றிருக்கிறது. இந்திய அணியின் தோல்வி குறித்து பல முன்னாள் இந்திய அணி வீரர்களும் தங்களின் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பற்றி ட்வீட் செய்திருக்கும் சச்சின் டெண்டுல்கர், ‘டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள். ஸ்டீவ் ஸ்மித்தும் ட்ராவிஸ் ஹெட்டும் முதல் நாளிலேயே ஆட்டத்தின் போக்கை ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக மாற்றும் வகையிலான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துவிட்டனர். இந்திய அணி ஆட்டத்தில் உயிர்ப்போடு இருக்க முதல் இன்னிங்ஸில் பெரிதாக ஸ்கோர் செய்ய வேண்டிய தேவை இருந்தது. ஆனால், இந்திய வீரர்களால் அதை செய்ய முடியவில்லை.’ எனக் கூறியிருக்கும் சச்சின் அணியில் அஷ்வின் இல்லாதது பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.