2017-ம் ஆண்டில் அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutirition Association) பழைய சோற்றின் பலன்களைப் பட்டியலிட்டிருந்தது. அதன்பிறகு உலகம் பழையதைத் தேடத் தொடங்கியது. அந்த ஆண்டு அமெரிக்கர்களால் அதிகம் தேடப்பட்ட உணவு செய்முறையில், பழைய சோறும் முக்கிய இடம் பெற்றது. அமெரிக்காவில் இருக்கும் பல ஓட்டல்களின் மெனு கார்டில் பழைய சோறு ஓர் உணவாக இடம்பெற்றது. இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், நோய் தீர்க்கும் ஆற்றலும் பழையதுக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
IBD (Irritable bowel disease) என்ற குடல் தொடர்பான நோய்களுக்குப் பழைய சோறு மருந்தாகச் செயல்படுவது குறித்து புதிய ஆராய்ச்சியை இப்போது தொடங்கியிருக்கிறது தமிழக சுகாதாரத்துறை. இந்த ஆராய்ச்சிக்காக ரூ.2.7 கோடி நிதியும் மூன்றாண்டுக் கால அவகாசமும் தரப்பட்டுள்ளது. IBD நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் 600 நோயாளிகளை இந்த ஆய்விற்குப் பயன்படுத்தவும் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.
பத்தாண்டுகளுக்கு முன்புவரை குடல் தொடர்பான Chron’s diesease , Ulcerative Colitis போன்ற IBD நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால், இன்று சென்னையில் மட்டும் இந்த நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்திருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டீராய்டு மருந்துகள் முதல் அறுவை சிகிச்சை வரை தேவைக்கேற்ப வழங்க வேண்டியிருக்கும். இந்தியாவில் ஒரு லட்சத்தில் 45 பேர் இந்த நோய்களால் அவதிப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. பழைய சோற்றில் லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் நிரம்பியுள்ளதால், இதை உட்கொள்வதன் மூலம் செரிமான மண்டலத்தில் உள்ள பிரச்னைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். ‘பழையது’ மற்ற எல்லாவற்றையும்விட இந்த நோய்க்கு எதிராக சிறப்பாக வேலை செய்வதை அறிந்து மருத்துவர்கள், நோயாளிகளுக்கு அதைப் பரிந்துரைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அறிவியல் ரீதியாக இதை நிரூபிக்கவே, தற்போது ஆராய்ச்சிக்குப் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை சென்னை ஸ்டான்லி மருத்துவமனை செய்துவருகிறது. அந்த மருத்துவமனையின் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் ஜஸ்வந்திடம் பேசினேன்.
“குடல் சிறப்பாகச் செயல்படவும் நாம் உண்பதைச் செரிமானம் செய்யவும் பாக்டீரியாக்கள் முக்கியம். போதுமான அளவு பாக்டீரியாக்கள் இல்லாதபோது வயிற்று வலி, கேஸ் ட்ரபிள் உள்ளிட்ட பிரச்னைகள் வரக்கூடும். அதன் அடுத்தகட்டமாக குடல் புண்ணாகிவிடும். கிராமத்துவாசிகளுக்கு பொதுவாக இந்தப் பிரச்னைகள் இருப்பதில்லை. அது ஏன் என ஆய்வு செய்யும்போதுதான் ‘பழைய சோறு’ என்ற உணவின் அருமை தெரியவந்தது. இதைச் சாப்பிட்டால் நல்லது என்பது தெளிவாகத் தெரிந்தாலும், பழைய சோற்றில் என்னனென்ன பாக்டீரியாக்கள் இருக்கின்றன என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்தால்தான் மருத்துவ உலகில் அதை ஏற்றுக்கொள்வார்கள். அதற்காகத்தான் இந்த ஆய்வை இப்போது மேற்கொள்கிறோம்.
‘உணவே மருந்து’ என்பதைத்தான் இந்தப் பழைய சோறு நமக்குச் சொல்லியிருக்கிறது. நோய் வந்த பின் மருந்தைத் தேடுவதைவிட, நோய் வருவதைக் குறைப்பதே நல்ல ஆரோக்கியம். அந்த வகையில் பழைய சோறு பல நோய்கள் நம்மை அண்டாமல் தவிர்க்க உதவுகிறது. பழைய சோறு வெளியில் இருந்து பாக்டீரியாவை எடுக்கிறது. எனவே பழைய சோற்றை எந்தச் சூழலில் தயாரித்துப் பயன்படுத்த வேண்டும் என்பதையும், அதனால் சூழல், ஊட்டச்சத்து அளவில் மாறுதலை உருவாக்குமா என்பதையும் இந்த ஆய்வில் கண்டறியப்போகிறோம்” என்றார்.
மேலை நாடுகளில் பழைய சோற்றுடன் எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து டின்களில் அடைத்து விற்கத் தொடங்கிவிட்டார்கள். நம் ஊரிலும் பல நட்சத்திர விடுதிகளில் காலை உணவாகப் பழைய சோற்றை. மண்பாண்டத்தில் வைத்து வற்றல், வெங்காயத்துடன் தருகிறார்கள்.
‘உணவே மருந்து’ என்பதுதான் நம் பாரம்பர்யம். அது வெறும் வார்த்தைகள் அல்ல, அறிவியல் உண்மை என்பதை நிரூபித்திருக்கிறது காலம்!