சென்னை அனகாபுத்தூர் பகுதியில் அடையாறு நதியைச் சீரமைக்க ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்புகள் அகற்றுகிறோம் என்ற பெயரில் தமிழக அரசு, காலம் காலமாக அங்கு வசிப்பவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று குறிப்பிட்டு அவர்களின் வீடுகளைக் கடந்த வாரம் புல்டோசர் கொண்டு இடிக்கத் தொடங்கியது.
மேலும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில்தான் இந்த இடிப்பு நடவடிக்கையை எடுத்து வருவதாகவும், அங்கிருந்து வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கு 390 சதுர அடியில் ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் வேறு பகுதியில் வீடு வழங்குவதாகவும் அரசு தெரிவித்திருக்கிறது.
இருப்பினும், திமுக அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் தரப்பிலிருந்தும், சமூக இயக்கங்கள் தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.
அந்த வரிசையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், “அடையாறு ஆற்றை ஆக்கிரமித்துக் கட்டியிருக்கும் காசா கிராண்ட் மற்றும் மாதா பொறியியல் கல்லூரி கட்டிடங்களை இடிக்க முதல்வர் தயக்கம் ஏன்?
ஏழைகளுக்கு எதிராக புல்டோசர்களை நிறுத்தும் அரசு பணக்காரர்களைக் கண்டால் பதுங்கி கிடப்பது ஏன்?” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.