டிப்ரெஷன் மற்றும் தூக்கமின்மைக்காக 5 வருடங்களுக்கு முன்பு மனநல மருத்துவரை சந்தித்து மருந்துகள் எடுக்க ஆரம்பித்தேன். இப்போது அவற்றை நிறுத்திவிட நினைக்கிறேன். மனநல மருந்துகளை அப்படியெல்லாம் திடீரென நிறுத்தக் கூடாது என்கிறார்கள். இதற்கு நான் அடிமையாகிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது. நான் என்ன செய்வது?
– மதன் (விகடன் இணையத்திலிருந்து)

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.
“டிப்ரெஷன், தூக்கமின்மை போன்ற மனநல பிரச்னைகளுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளை நிறுத்திவிட வேண்டாம், `Take this medication regularly to get most benefit from it’ என்ற அறிவிப்புடன் விற்கிறார்கள். கூடவே `Keep taking this medication even if you feel well’ என்றும் சொல்கிறார்கள். இதனால் ஒரு பிரச்னைக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகளை வருடங்கள் கடந்தும் தொடர்வது பலருக்கும் பழக்கமாகவே மாறிவிடுகிறது.
ஒரு பிரச்னைக்காக, குறிப்பிட்ட காலத்துக்கு மருத்துவர்கள் மருந்துகளைப் பரிந்துரைக்கிறார்கள். அந்த மருந்துகளைத் தயாரிக்கும் சில நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களில் மேற்குறிப்பிட்டபடி தகவல்களை வெளியிடுவதால், மக்கள் ஒருகட்டத்தில் குழம்பிப் போகிறார்கள்.
உங்களுக்கு உடல்நலமில்லாதபோதும் மனநலம் சரியில்லாதபோதும் மருத்துவரின் அறிவுரைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள். உடலும் மனமும் குணமான பிறகு, மருந்துகளை நிறுத்திவிடுங்கள். இதுதான் சரியானது. ஆனால், `நீங்கள் ஒரு பிரச்னையிலிருந்து குணமான பிறகும், அதற்கான மருந்துகளை நிறுத்திவிடாதீர்கள், அதன் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்’ என்று பயமுறுத்துவதுதான் இன்று அதிகம் நடக்கிறது. பெரும்பாலான மனநல மருந்துகளுக்கு இப்படிச் சொல்லப்படுவதைப் பார்க்கலாம்.