இந்நிலையில், கார்த்திக்கின் விளையாட்டுத் திறனைப் பற்றி அறிந்துகொண்ட தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சி பயிற்சியாளர், கார்த்திக்கை அழைத்து அவரது ஹாக்கி விளையாட்டுத் திறனை மேம்படுத்தியுள்ளார். பின்னர், கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதியிலிருந்து கொண்டே அங்குள்ள எஸ்.எஸ்.துரைசாமி நாடார் கல்லூரியில் பி.ஏ. வரலாற்றுப் படிப்பில் சேர்ந்தார்.
அங்கிருந்து அவரது விளையாட்டு திறனால், பெங்களூர் சாய் விளையாட்டு மையத்திற்கு ‘எக்லான்ஸ்’ அணிக்காகத் தேர்வு செய்யப்பட்ட அவர் அங்கு பல போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். இந்நிலையில்தான், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆசிய ஹாக்கி போட்டி தொடருக்கான இந்திய அணியில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் கார்த்திக். மே 23-ம் தேதி தொடங்க உள்ள தொடக்கப்போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அரியலூரைச் சேர்ந்த எஸ்.கார்த்திக் முன் களத்தில் ஆட உள்ளார்.
இவரோடு தேர்வாகியுள்ள மற்றொரு தமிழக வீரரான கோவில்பட்டி மாரீஸ்வரன் சக்திவேல் இதே போட்டியில் நடுகளத்தில் ஆட உள்ளார். தமிழகத்திலிருந்து ஒரே நேரத்தில் 2 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளனர் தமிழக ஹாக்கி வீரர்கள்.