“ஓபிஎஸ் தரப்புன்னா 4 பேர்தான், இபிஎஸ் தலைமைல தான் அதிமுக இருக்கு” – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Share

சென்னை: ஓபிஎஸ் தரப்புன்னா 4 பேர்தான், இபிஎஸ் தலைமைல தான் அதிமுக இருக்கு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை தொடங்கியதும் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் 2 நாள் கூட்டத்தை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதேநேரத்தில் பேரவையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடத்தை மாற்றிக் கொடுக்காததால், கூட்டத்தில் எடப்பாடியும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்; 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை அதிமுக அடையும். ஜெயலலிதா சொன்னது போல நாற்பதும் நமதே நாடு நமதே என்கிற அடிப்படையிலேயே ஒரு வரலாற்றை படைக்கின்ற இயக்கம் அதிமுக. அது மட்டுமில்லாமல் 2026-ல் சட்டமன்ற தேர்தல் வரும்போது அதிமுக மகத்தான வெற்றி பெற்று அதன் மூலம் எம்ஜிஆருடைய ஆட்சியை புரட்சித்தலைவி அம்மாவுடைய அரசு தமிழ்நாட்டிலேயே மலரும். இபிஎஸ் கடிதத்திற்கு சபாநாயகர் மதிப்பளிக்க வேண்டும். இபிஎஸ் கடிதத்தை மதித்து உரிமை வழங்க வேண்டிய கடமை சபாநாயகருக்கு உள்ளது.

ஓபிஎஸ் தரப்புன்னா 4 பேர்தான், இபிஎஸ் தலைமைல தான் அதிமுக இருக்கு. இபிஎஸ் தரப்பில் தான் அதிக உறுப்பினர்கள் உள்ளனர். எந்த ஒரு கட்சிக்கும் இல்லாத ஒரு வரலாறு அதிமுகவுக்கு இருக்கு என அதிமுகவின் 51வது ஆண்டு விழா குறித்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்; மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கோட்பாட்டை பின்பற்றி வருகிறோம். மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதாக இருந்தால் அதை அதிமுக கண்டிப்பாக எதிர்க்கும். 100 மத்திய அமைச்சர்கள் கூட தமிழகத்திற்கு வரட்டும். ஆனால் அவர்களால் நல்லது நடந்தால் சரி. மாநில உரிமைகளில் தலையிட்டால் கண்டிப்பாக எதிர்ப்போம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com