சென்னை: இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக எம்பிக்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக திமுக சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். இத்துடன், திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 3.5.2022 அன்று வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டதை தொடர்ந்து திமுக பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை “முதலமைச்சர் பொது நிவாரண நிதி”க்கு வழங்கிடுவர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.