அடுத்ததாக, ராகுலுக்கு பார்ட்னரான கோலியும் ஃபார்மை மீட்டெடுப்பதில் கவனமாக இருப்பதால் தொடக்கத்தில் ரன்ரேட் மொத்தமாகப் படுத்தேவிட்டது. ஸ்பின்னர்களுக்கு எதிராக தங்களது விக்கெட்டைப் பாதுகாத்துக் கொள்வதற்கே அவர்கள் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. குறிப்பாக, ஏசான் கான் மற்றும் முர்டஜாவின் சுழல் இக்கூட்டணிக்கு நெருக்கடி தந்தது. ஏசானின் பௌலிங் சக்லைன் முஸ்டாக்கை நினைவுபடுத்துவதைப் போல இருந்தது, முர்டஜா, வேகத்தைக் குறைத்து ரன் சேர்ப்பதை இன்னமும் கடினமாக்கினார். 10 ஓவர்கள் முடிவில்கூட 70 ரன்கள் மட்டுமே வந்து சேர்ந்திருந்தன. போட்டியின் 33% பந்துகளைச் சந்தித்திருந்த ராகுல், அணியின் ஸ்கோரில் 19 சதவிகிதம் ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். இந்த இடைவெளிதான் இந்தியாவை சூர்யா, பண்ட் என மற்றவர்களிடமெல்லாம் ஓப்பனரைத் தேட வைத்துள்ளது.
13-வது ஓவரில் ஸ்வீப் ஷாட் ஆட முயன்று ராகுல் வெளியேறிய போது இந்தியாவின் ஸ்கோர் வெறும் 94தான். ஏழு ஓவர்கள் எஞ்சியிருக்கும் போதுதான் சூர்யக்குமார் உள்ளே வந்தார். உண்மையில், அவர் வந்த பிறகுதான் களத்திற்கே உயிர் வந்தது. போட்டியிலும் அனல் பறக்கத் தொடங்கியது. கோலியும் அதன் பின்தான் தனது ஸ்ட்ரைக்ரேட்டை சற்றே அதிகரித்தார். பல நாள்களாகத் தேடிக் கொண்டிருந்த பழைய கோலியின் சாயலை சில ஷாட்களில் பார்க்க முடிந்ததோடு அவரது அரைசதமும் வந்து சேர்ந்தது. மார்ச் 2021-க்குப் பிறகு, இதுதான் (59) கோலியின் அதிகபட்ச டி20 ஸ்கோர்.
ஸ்லோ விக்கெட், பந்துகள் பேட்டுக்கு வரவில்லை, இதெல்லாம் மற்ற பேட்ஸ்மேன்கள் கூறும் சமாதானம். சூர்யக்குமாரைப் பொறுத்தவரை களம் என்பதே அவருக்கு அவுட் ஆஃப் சிலபஸ்தான். பாண்டிங், தான் ஆடும் போது, தனக்கு ஃபீல்டர்கள் தெரிவதில்லை, நடுவிலுள்ள இடைவெளி மட்டுமே தெரியும் என்பார். சூர்யாவுக்கோ, ஃபீல்டர்கள், இடைவெளி எதுவுமே தெரிவதில்லை. பந்தும் பவுண்டரி லைனும் மட்டுமே கண்களுக்குத் தெரிகிறது. அதுவும் கல்லி கிரிக்கெட்டில் ஆடுவது போன்ற அன்ஆர்தடாக்ஸ் ஷாட்களின் அணிவகுப்புதான் அவரது மொத்த இன்னிங்ஸும். 130 என்பது முதல் இன்னிங்ஸின் ஆவரோஜாக உள்ள பிட்சில் 170 ரன்கள் நல்ல ஸ்கோர் எனச் சொல்லப்பட, 261 ஸ்ட்ரைக் ரேட்டில் வந்த அவரது ரன்கள், இலக்கை 193 வரை கொண்டு போய் நிறுத்தியது. ஹர்திக் எந்த வகையில் இந்தியாவின் பொக்கிஷமோ, சூர்யாவும் அப்படித்தான்.