மீனம்பாக்கம்: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை 4 நாட்கள் பயணமாக இலங்கை சென்றிருந்தார். அங்குள்ள மக்களை சந்தித்து குறைகள் கேட்டறிந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை 4.50 மணியளவில் அண்ணாமலை சென்னைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி; இலங்கையில் இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்னை டாலர். அதற்கு தீர்வு காண, நமது நாடு கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறது. இலங்கைக்கு இந்தியாவில் இருந்து ஒன்றரை மில்லியன் டாலர் உதவியாக சென்றிருக்கிறது.
அவசர கால உதவியாக பிரதமர் மோடி சார்பில் மருத்துவம், காய்கறிகள் உள்ளிட்டவற்றை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. இலங்கையை மிகவும் பின்தங்கிய வருவாய் நாடுகளின் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது. தமிழக அரசு வழங்கவிருக்கும் பல்வேறு உதவிகளுக்கு இலங்கை மக்களும் இந்திய வம்சாவளியினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இலங்கை மக்களுக்கு தேவையான அரிசி, மருந்து உள்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இலங்கை மக்களுக்கு தமிழக அரசு அளிக்கக்கூடிய உதவிகளுக்கு பாரதிய ஜனதா கட்சி உறுதுணையாக இருக்கும். இதுபற்றி இன்று மாலை பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் விரிவாக தெரிவிப்பேன். இவ்வாறு கூறினார்.