ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருப்பதே தனியார் மயம்தான். நிறுவனங்களுக்கிடையே நிலவும் போட்டியில் அவர்கள் வெல்ல எந்த எல்லைக்கும் செல்வார்கள் எனும் போது அவர்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு அரசிடம்தான் இருக்கிறது. மருத்துவர்களுக்கான செமினார்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும். அது போன்ற செமினார்களில் ஒவ்வொரு மருத்துவரும் அவசியம் கலந்து கொண்டு புதிய மருத்துவத் தொழில் நுட்பத்தைக் கற்றுத் தேர்ந்தால்தான் அவர்கள் மருத்துவப் பணியைத் தொடர முடியும்.
இந்த செமினார்கள் தனியாரால் நடத்தப்படுபவை. அதற்கு ஒவ்வொரு மருத்துவரும் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கும். எனவே இந்த செமினாருக்கு மருந்து நிறுவனங்கள்தான் ஸ்பான்ஸர் செய்கின்றன. சுற்றுலாவுக்கோ, கருத்தரங்குக்கோ மருத்துவர்களை வெளிநாடு அனுப்பவும் செய்கின்றன. அரசே இந்த செமினார்களை நடத்தினால் மருந்து நிறுவனங்கள் உள் நுழையத் தேவையில்லையே. எந்தெந்த முறையில் மருந்து நிறுவனங்கள் பணம் கொடுக்கின்றனவோ அந்த வழிகளையெல்லாம் துண்டிக்க வேண்டும்.
இது போன்ற முறைகேடுகளுக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். மருந்தியல் தொடர்பாக அமைக்கப்பட்ட ஹாத்தி கமிட்டி (Hathi committee) அனைத்து மருந்துகளின் வர்த்தகப் பெயர்கள் நீக்கப்பட்டு, மருந்தியல் பெயர்களிலேயே அவை சந்தைப்படுத்த வேண்டும் என்கிற கருத்தை முன் வைத்தது. டோலோ 650, குரோசின் என்றில்லாமல் மருந்தியல் பெயரான பாரசிட்டமால் என்றிருந்தாலே தங்களது பிராண்டை முன் நிறுத்துகிற போக்கு நிலவாது.
வெவ்வேறான மருந்துகளின் வர்த்தகப் பெயர்கள் ஒன்று போலவே இருக்கின்றன. இதனால் ஏற்படும் குழப்பத்தால் மருந்துகளை மாற்றிக் கொடுக்கும் அவலமும் நடக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு மருந்தியல் பெயர்களை மட்டுமே அச்சிட்டு விற்பனை செய்ய வேண்டும். மருத்துவர்களும் மருந்தியல் பெயர்களை மட்டுமே எழுத வேண்டும்.” என்கிறார் ரவீந்திரநாத்.