சில மருந்துகள் இத்தனை நாள்கள்தான் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு, ஆன்டிபயாடிக்குகளை (Antibiotics) சொல்லலாம். அவற்றை 3 நாள்கள், 7 நாள்கள் அல்லது 10 நாள்கள் என எடுக்கச் சொல்லியிருப்பார்கள்.
அப்படிப்பட்ட மருந்துகளைக் குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு நிறுத்திவிடலாம். ஆனால், சர்க்கரைநோய் (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் போன்ற பிரச்னைகளுக்கான மருந்துகளை, மருந்துச்சீட்டில் 30 நாள்கள் என்று போட்டிருந்தாலும் அத்துடன் நிறுத்தக்கூடாது.
மருத்துவரைச் சந்திக்க அடுத்த அப்பாயின்ட்மென்ட் கிடைக்க இரண்டு, மூன்று நாள்கள் தாமதமாகலாம். சில மருந்துகளை வாழ்நாள் முழுவதும் எடுக்க வேண்டியிருக்கும். எனவே, அடுத்த முறை மருத்துவரைப் பார்க்கும் வரை அந்த மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வது அவசியம்.

மற்றபடி, எப்போதுமே மருத்துவர் சந்திப்பை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வது நல்லது. ஒருவேளை மருத்துவர் புதிய ரத்தப் பரிசோதனைகள் ஏதேனும் செய்யச் சொன்னால், அவற்றின் முடிவுகள் வருவதற்கு ஒன்றிரண்டு நாள்கள் ஆகலாம். மருந்துகள் கையில் இருக்கும்போதே இதைச் செய்துவிடுவது நல்லது.
உங்கள் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தால், மருத்துவர் மருந்தின் அளவைக் குறைக்கவோ அல்லது மாற்றவோ வாய்ப்புண்டு. அதை முன்கூட்டியே அறிந்துகொள்வது நல்லது. ஒருவேளை உங்களால் குறிப்பிட்ட நாளில் செல்ல முடியவில்லை என்றால், உங்கள் பார்மசியில் பேசி, அதே மருந்துகளை இன்னும் இரண்டு நாள்களுக்கு மட்டும் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, பிறகு மருத்துவரைப் பார்க்கலாம். ஆனால், இதை எப்போதாவது ஒரு முறை செய்யலாமே தவிர, வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.