லண்டன்: கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயிலுடன் தான் இருக்கும் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விஜய் மல்லையா. “சிறந்த நண்பரை சந்தித்ததில் மகிழ்ச்சி” எனவும் அதற்கு அவர் கேப்ஷன் கொடுத்துள்ளார். பல்லாயிரம் பேர் இந்தப் படத்தை லைக் செய்துள்ளனர். கெயில் அதை ரீ-ட்வீட் செய்துள்ளார்.
இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய பல தொழிலதிபர்களில் மிகவும் முக்கியமானவர் விஜய் மல்லையா. இந்தியாவில் பல்வேறு நிதி ஆதாய குற்றங்கள் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அதை எதிர்கொள்ளும் வகையில் இங்கிலாந்து நாட்டில் இருந்து அவரை நாடு கடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இந்திய அரசாங்கம். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் உரிமையாளராக அறியப்படுகிறார்.
பெங்களூரு அணிக்காக ஐபிஎல் அரங்கில் கிரிக்கெட் விளையாடி பல்வேறு சாதனைகளை படைத்தவர் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில். பெங்களூரு அணிக்காக 85 போட்டிகளில் விளையாடி 3163 ரன்கள் எடுத்தவர் கெயில். 19 முறை அரை சதமும், 5 முறை சதமும் விளாசி உள்ளார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் அண்மையில் சந்தித்துள்ளதாக தெரிகிறது. அதற்கு ஆதாரமாக இந்தப் படத்தை பகிர்ந்துள்ளார் விஜய் மல்லையா.
“எனது சிறந்த நண்பரான கிறிஸ்டோபர் ஹென்றி கெயிலை சந்தித்ததில் மகிழ்ச்சி. யுனிவர்ஸ் பாஸ். நான் அவரை பெங்களூரு அணிக்காக விளையாட தேர்வு செய்து காலத்தில் இருந்து எங்களது அற்புதமான சூப்பர் நட்பு தொடர்ந்து வருகிறது” என தெரிவித்துள்ளார் மல்லையா. இந்தப் படத்தை சுமார் 53,000-க்கும் மேற்ப்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Great to catch up with my good friend Christopher Henry Gayle @henrygayle , the Universe Boss. Super friendship since I recruited him for RCB. Best acquisition of a player ever. pic.twitter.com/X5Ny9d6n6t