“இந்தியா வெற்றி!’
இந்திய அணி ஓவலில் ஒரு சரித்திர வெற்றியைப் பெற்றிருக்கிறது. நிஜமாகவே சரித்திர வெற்றிதான். ஏனெனில், இந்தத் தொடருக்கு முன்பாக சீனியர்கள் கூட்டாக ஓய்வு பெற்றனர். புதிய கேப்டனோடு இளம் வீரர்களோடு இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி எப்படியும் தோல்வியைத்தான் தழுவப் போகிறது என்பதுதான் பலருடைய கணிப்பாகவும் இருந்தது. அதையெல்லாம் மாற்றி தொடரை 2-2 என டிரா செய்திருக்கின்றனர்.
ரிசல்ட்டை கடந்து இந்திய அணி கடுமையாக போராடியிருக்கிறது. எந்தத் தருணத்திலும் எதையும் எளிதாக விட்டுக் கொடுத்துவிடவில்லை. 5 டெஸ்ட் போட்டிகளுமே ஐந்தாவது நாள் வரை சென்றிருக்கிறது. இதுதான் இந்தியாவின் போராட்டக் குணத்துக்கான சான்று.
நடந்து முடிந்திருக்கும் 5 போட்டிகளிலும் ஓவல் ஒரு உச்சம். திடுக் திருப்பங்களை கொண்ட பரபர திரில்லரைப் போல இந்த ஆட்டம் இருந்தது. அந்த எதிர்பாராத திருப்பங்களில் புகுந்து ஆட்டத்தை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியது சிராஜ்தான். ஒரு கட்டத்தில் இங்கிலாந்தும் போட்டியை விடுவதாக இல்லை. வெற்றிக்கு 17 ரன்கள்தான் தேவை. கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருக்கிறது. கிறிஸ் வோக்ஸூக்கு ஒரு கை உடைந்திருக்கிறது. உடைந்த கையை கட்டி டீசர்ட்டுக்குள் பொதிந்து கொண்டு ஒற்றைக் கையில் கடைசி விக்கெட்டுக்கு பேட்டிங் ஆட வந்தார்.