மெதுவாக அவரிடம் சென்றான்.
> “என்னடா ராகவா? என்ன ஆச்சு?
இங்கே உக்காந்துட்டு இருக்க? ரொம்ப சோகமா இருக்கே.
என்ன விஷயம்?”
என்று ஜோசியர் கேட்டார்.
> “மாமா, இன்னைக்கு காலையில இன்டர்வியூக்குப் போறப்போ
என் சர்டிபிகேட் எல்லாம் தொலைந்துட்டு.அது கிடைக்குமா, கிடைக்காதான்னு தெரியல மாமா…
கொஞ்சம் என்னுடைய ராசி எப்படி இருக்குன்னு பார்த்து சொல்ல முடியுமா?”
என்று ராகவன் கேட்டான்.
ஜோசியரும் சுற்றி இருப்பவர்களும் விக்கித்து போனார்கள்.
> “அடடா பாவமே… இந்த பையன்
படிச்ச எல்லா சர்டிபிகேட்டையும் தொலைச்சுட்டானே…
என்ன பண்ணுவான் தெரியலையே…”
என்று ஜோசியரோடு சேர்ந்து
அங்கு இருந்தவர்கள் அனைவரும் பரிதாபப்பட்டார்கள்.
ஜோசியரும் இவனுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்ற நோக்கில்
> “போடா போ… அரச மரத்தடி பிள்ளையாரை வேண்டிக்கோ.
அவர் நினைச்சா தான் உனக்கு கிடைக்கும்.
போய் பிள்ளையாரை வேண்டிக்கோ,”
என்று சொன்னார்.
ராகவனுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது.
“என்ன ஜோசியர் இவரு!”
என்று நினைத்தபடி வீட்டிற்கு வந்தான்
எல்லோரும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருந்தார்கள்.
அப்பா கொஞ்சம்கூட பேசவில்லை.
அம்மா அழுது கொண்டே இருந்தாள்.
> “என்னடா ராகவா, இப்படி ஆயிடுத்தேடா?”
என்று விசும்பினாள்.
தங்கை:
> “என்னண்ணா இப்படி பண்ணிட்ட?
கொஞ்சம் பொறுப்பா இருக்க கூடாதா?”
என்று கடுகடுத்தாள்.
உடனே டிரஸ் மாற்றிக்கொண்டு ராகவன் மறுபடியும் டீக்கடைக்கு வந்தான்.
அவன் நண்பர்களும் அமர்ந்திருந்தார்கள்.
> “என்னடா ராகவா, வீட்ல என்ன சொன்னாங்க?”
“இல்லடா… எல்லாரும் ரொம்ப கோவமா இருக்காங்க.
என்ன பண்றதுன்னே தெரியலடா.”
> “கவலைப்படாதடா.
நான் இப்பதான் விசாரிச்சேன்.
பள்ளி கல்வித்துறைக்கு எழுதி டூப்ளிகேட் வாங்கிடலாமாம்.
அதே மாதிரி நம்ம யூனிவர்சிட்டிக்கும் அப்ளை பண்ணி
டிகிரி சர்டிபிகேட் வாங்கிடலாம்.
அது ஒன்னும் பிரச்சனை இல்லடா.
ஆனா வரதுக்கு ஒரு 30-40 நாள் ஆகும்னு நினைக்கிறேன்.
ஆன்லைன்ல கூட அப்ளை பண்ணிக்கலாம் போல இருக்கு — விசாரிச்சிட்டேன்டா,”
என்று நண்பன் சொன்னான்.
ராகவனுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.
ஆனாலும் அதுவரை நம்மால் எந்த வேலைக்கும் அப்ளை பண்ண முடியாது. மறுபடியும் ஓபனிங் இருக்கணும் என்பது ஒரு கவலை.
> “அதுக்கு முன்னாடி போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கணும் போல இருக்கு. அதுக்கப்புறம் பேப்பர்ல ஆட் கொடுக்கணும் போல இருக்கு.
இரண்டும் வைத்துத்தான் யூனிவர்சிட்டிக்கும்,
பள்ளி கல்வித்துறைக்கும் அப்ளை பண்ண முடியும்,”
என்று இரவெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
டீக்கடை பார்வதியம்மாளும்
இவர்களிடம் வந்து கேட்டார்:
> “என்னடா சொல்லுங்கடா, ஏன் எல்லாரும் இப்படி இருக்கீங்க?
என்ன பிரச்சனை?” என்று கேட்டாள்.
> “அட போம்மா… நாங்களே ஆயிரத்தெட்டு பிரச்சனைல இருக்கோம்.
டீ குடும்மா… டீ குடிச்சா தான் கொஞ்சம் பிரச்சனை தீரும் போல இருக்கு…” என்று சொல்லிவிட்டு, எல்லோரும் வீட்டுக்கு கிளம்பி விட்டார்கள்.
காலையில் பேப்பர்காரர் வந்தார்.
> “தம்பி… நான் சொல்றத கேளுப்பா…
ஒரு ஆட்டோ எடுத்துக்கோ. மைக் செட் போட்டுக்கோ.
அந்த பஸ் போன ரூட்டுல முழுக்க நம்ம சொல்லிக்கிட்டே போலாம் –
‘சர்டிபிகேட் தொலைந்து விட்டது, யாராவது எடுத்திருந்தால் கொடுத்துடுங்க’ன்னு…
அதே மாதிரி பேப்பர்லயும் ஆட் கொடுத்துவிடலாம்.”
பக்கத்து வீட்டு கோபாலன் வந்தார்:
> “வாடா ராகவா…
நம்ம போய் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன் கொடுத்து விட்டு வரலாம்.
அந்த எஃப்.ஐ.ஆர் காப்பியோடதான்
யூனிவர்சிட்டிக்கு அப்ளை பண்ணனும்.”