கடந்த ஆண்டு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தபோது, ஜூன் மாதம் ஐ.சி.சி டி20 உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி. ஆனால், கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பற்ற பிறகு இந்திய அணி தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வருகிறது.
27 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையிடம் ஒருநாள் தொடரை இழந்தது. அதைத்தொடர்ந்து, சொந்த மண்ணில் நியூசிலாந்துடன் 0 – 3 என டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இப்போது, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரை 1 – 3 இழந்திருக்கிறது.

கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களில் தோல்வியடைந்ததில் அணியின் பேட்டிங் யூனிட் பர்ஃபாமன்ஸ் மோசமாக இருந்தது முக்கிய காரணம். குறிப்பாக, கேப்டன் ரோஹித் மற்றும் சீனியர் வீரர் கோலி ஆகியோரின் பேட்டிங் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதேசமயம், தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு அணியை எந்த அளவுக்கு முன்னேற்றியிருக்கிறீர்கள் என்ற கேள்விகள் கம்பீர் மீது எழாமலும் இல்லை. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்நாள் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் அணியின் பயிற்சியாளர்கள் மீதான தனது கேள்விகளை அடுக்கியிருக்கிறார்.