சென்னை அணியின் முக்கிய இளம் வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் இந்த ஐபிஎல்-லில் மட்டும் சிஸ்கே அணிக்காகத் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 590 ரன்களைக் குவித்திருந்தார். தனது அதிரடி ஆட்டம் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆதரவைப் பெற்றுள்ள ருத்துராஜ், அவ்வப்போது சர்வதேச போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

அந்த வகையில் வரும் ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியிலும் பேக்அப் தொடக்க வீரராக அவர் இடம்பிடித்திருந்தார். ஆனால் திருமணம் செய்ய இருப்பதால், அந்தப் போட்டியில் அவர் பங்கேற்கப் போவதில்லை என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.
இந்நிலையில் நேற்று (ஜூன் 3) ருத்துராஜ் கெய்க்வாட் – உத்கர்ஷா பவார் என்ற மகாராஷ்டிரா கிரிக்கெட் வீராங்கனையைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள தனியார் ஓட்டலில் விமரிசையாக நடைபெற்ற இந்தத் திருமண விழாவில் சிவம் துபே உள்ளிட்ட சிஸ்கே அணியின் வீரர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்றுள்ளனர்.

திருமணம் தொடர்பான புகைப்படங்களை ருத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ருத்துராஜ் கெய்க்வாட் – உத்கர்ஷா பவார் ஜோடிக்கு கிரிக்கெட் வீரர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.