பிப்ரவரி- 13, 2022.
ஐ.பி.எல் 2022-ன் மெகா ஏலம் பெங்களூரு நகரில் கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. நடப்புத் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டன. இதன் பொருட்டு, இளம் இந்திய வீரர்களுக்கான வாய்ப்புகள் இந்தாண்டு அதிகரிக்கும் என்பது அனைவரின் கணிப்பாகவும் இருந்தது. அதேபோல, ரஜித் பட்டிதரும், ஏதேனும் ஒரு அணி தன்னை ஏலத்தில் எடுக்கும் என்றே காத்திருந்தார். ஆனால் இரண்டு நாட்கள் முடிவில் அந்த முன்னாள் ஆர்.சி.பி வீரரை எந்த ஒரு அணியும் விலைக்கு வாங்க முன்வரவில்லை.
ஆனால், வாய்ப்பு தேவதை பட்டிதரை அவ்வளவு எளிதில் கைவிட்டிருக்கவில்லை. பெங்களூரு கேம்பில் லுவ்னித் சிசோதியா என்ற வீரர் காயமடையவே தன் பழைய அணிக்காக மாற்று வீரராக மீண்டும் அழைக்கப்பட்டார் அவர். ஐ.பி.எல்லின் இந்த ஆண்டுக்கான போட்டிகள் தொடங்கின. ரஜத் பட்டிதருக்குப் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படியான ஒரு சந்தர்பபத்தில் நேற்றைய போட்டியில் விளையாடுகிறார் ரஜத் பட்டிதர். ஐ.பி.எல் ஏலத்தில் அன்-சோல்டான ரஜத் பட்டிதர் 101-வது நாளில் நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் அசத்தல் சதமடித்து ஆர்.சி.பி-யின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ரட்சகனாக உருவெடுத்திருக்கிறார்.