இந்தியாவில், வொர்க் லைஃப் பேலன்ஸ் இல்லாமல் 80 சதவிகிதம் கார்ப்பரேட் ஊழியர்கள் கடந்த ஆண்டில் மோசமான மனநிலைக்குத் தள்ளப்பட்டதாக, ஆய்வு தெரிவிக்கிறது.
வேலைக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துவிட்டது. அதே நேரம், வொர்க் லைஃப் பேலன்ஸ் செய்யத் தெரியாமல் பலவித அவதிக்குள்ளாகின்றனர். வேலைக்காகச் செலவிடும் நேரத்தையும், குடும்பத்திற்காக மற்றும் தனக்குப் பிடித்தமான விஷயங்களுக்காகச் செலவிடும் நேரத்தையும் சமநிலையாக வைத்துக் கொள்வதுதான் வொர்க் லைஃப் பேலன்ஸ். இதில், எந்த ஒரு விஷயத்தைத் தவிர்க்க நேரிடுவதாலும், வாழ்வில் மிகவும் அவசியமான விஷயங்களுக்கு நேரமில்லாமல் போவதாலும், மக்களால் வொர்க் லைஃபை பேலன்ஸ் ஆக வைத்துக்கொள்ள முடியாமல் போகலாம். இது அவர்களை அதீத மன அழுத்தத்திற்கு ஆளாக்கும்.
மொபைல் தொழில்நுட்பம் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற மென்பொருள்களின் பயன்பாடு தற்போதைய கார்பரேட் பணியிடங்களில் கட்டாயமாகிவிட்டது. அதனால் வீட்டிலிருந்தே வேலை செய்வது, வேலைநேரம் முடிந்த பிறகும் தொடர்ந்து வேலையைத் தொடர்வது என, பணியில் அதிகநேரம் செலவிடுவதால், மற்ற விஷயங்களுக்கு நேரமில்லாமல் போய்விடுகிறது.