வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் அதிக அளவில் உருவாகிவரும் நிலையில் கடன் வழங்குவதில் விதிமிறைகளை மீறி செயல்பட்டதற்காக 5 நிறுவனங்களின் பதிவை ரத்து செய்துள்ளது ரிசர்வ் வங்கி.
ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பை நிர்வகிப்பது, பணப்புழக்கத்தை தீர்மானிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் பங்களிக்கும் முக்கிய அமைப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நிதி சார் துறை நிறுவனங்களைக் கண்காணிக்கும் அமைப்பாகவும் உள்ளது.
அந்த வகையில் முதலீட்டாளர்கள், பொது மக்களின் நலன் கருதி தொடர்ந்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. தற்போது யுஎம்பி செக்யூரிட்டீஸ் லிமிடெட், அனாஷ்ஶ்ரீ ஃபின்வெஸ்ட்,சத்தா ஃபைனான்ஸ், அலெக்ஸி ட்ராகோன், ஜூரியா ஃபைனான்சியல் சர்வீசஸ் ஆகிய 5 வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (என்பிஎஃப்சி) பதிவை ரத்து செய்துள்ளது.
இந்த நிறுவனங்கள் டிஜிட்டல் கடன் வழங்கல் செயல்பாடுகளில் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளன. இவை மூன்றாம் தரப்பு கடன் வழங்கும் செயலிகள் மூலமாக அதிக வட்டி வசூலிப்பது, கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களை சட்டத்துக்குப் புறம்பாக நடத்துவது என பல்வேறு முறைகேடான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. எனவே ரிசர்வ் வங்கி இந்த 5 என்பிஎஃப்சி நிறுவனங்களின் பதிவுகளை ரத்து செய்து அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.