
பட மூலாதாரம், TRANSFORMATIVE JUSTICE COLLECTIVE
சரியாக காலை ஆறு மணிக்கு தூக்கிலிடப்பட்டார் தங்கராஜு சுப்பையா.
போதைப்பொருள் குற்றங்களுக்காக கடுமையான தண்டனை விதிக்கப்படும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. அந்த வகையில் போதைப்பொருள் கடத்தலுக்காக தூக்கிலிடப்பட்டோர் பட்டியலில் கடைசியாக இணைந்திருப்பவர் தங்கராஜு சுப்பையா.
சிங்கப்பூரில் கடைசியாக 2022 அக்டோபர் மாதம் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டில் தூக்கிலிடப்பட்ட முதல் நபர் தங்கராஜு.
உலகளவில் தற்போது 110 நாடுகள் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழித்துவிட்டன.
இந்நிலையில் சிங்கப்பூர் உள்ளிட்ட நான்கு நாடுகள் மட்டுமே போதைப்பொருள் தொடர்புடைய குற்றங்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுகின்றன என ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் சுட்டிக்காட்டுகிறது.
இதற்குப் பதிலளித்துள்ள சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம், போதைப்பொருளுக்கு எதிரான கடுமையான சட்டங்களால் பல்லாயிரம் மனித உயிர்கள் காப்பாற்றப்படுவதாகக் கூறியுள்ளார்.
மரணத்தின் விளிம்பில் மகன்; விவரம் தெரியாமல் சந்தித்துப் பேசிய தாய்
“அனைவரும் எதிர்பார்த்த நிகழ்வுதான். எனினும், சக மனிதனின் உயிரிழப்பை ஜீரணித்துக்கொள்வது அவ்வளவு எளிதல்ல,” என்கிறார் சமூக செயல்பாட்டாளர் கோகிலா அண்ணாமலை.
தூக்குக் கயிற்றின் பிடியில் இருந்து தங்கராஜுவை மீட்டெடுக்கப் போராடியவர்களில் இவரும் ஒருவர். தங்கராஜுவின் கடைசித் தருணங்கள் குறித்து தமது முகநூல் பக்கத்தில் விரிவாகப் பதிவிட்டுள்ளார் கோகிலா.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) காலை சிங்கப்பூர் சிறையில் இருந்த தனது மகனை பார்க்க தங்கராஜுவின் தாயார் திருமதி பாப்பாவை தாம் அழைத்துச் சென்றதாகக் குறிப்பிட்டார்.
“சிறைக்குச் செல்லும் வழியில் உற்சாகமாகப் பேசியபடியே இருந்தார் திருமதி பாப்பா. முதுமை காரணமாக நர்சிங் ஹோம் ஒன்றில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
“நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது மகனை சந்திக்கப் போகும் ஒரு தாயின் மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. தனது குடும்பத்துக்காக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட பெண்மணி அவர். கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் சாலைத் துப்பரவுத் தொழிலாளியாக வேலை பார்த்துள்ளார்.
“மகன் தங்கராஜுவை மறுநாள் தூக்கிலிடப் போகிறார்கள் என்ற விவரம் அவருக்குத் தெரியாது. மகன் தன்னிடம் நன்றாகப் பேசியதாகவும், தங்கராஜுவின் கடந்தகால பிறந்தநாள் கொண்டாட்டங்கள், தனது திருமண நாள் குறித்தெல்லாம் பேசி மகிழ்ந்ததாகவும் கூறினார்.. என் மகன் தங்கராஜு நன்றாக இருக்கிறார். இதை அவரே என்னிடம் தெரிவித்தார் என்று மகனுடனான சந்திப்பு குறித்து அந்த மூதாட்டி என்னிடம் குறிப்பிட்டபோது வருத்தமாக இருந்தது. இனி அம்மூதாட்டியால் தனது வாழ்நாளின் இறுதி வரை தன் மகனை மீண்டும் சந்திக்கவே இயலாது. மகனின் குரலைக் கேட்க முடியாது என்ற உண்மை என் மனதை தாக்கியபோது, சில நொடிகளுக்கு நானும் நிலைகுலைந்து போனேன்,” என்கிறார் கோகிலா அண்ணாமலை.
ஒரு வாரப் போராட்டம்; நிறைவேற்றப்படும் கைதிகளின் கடைசி விருப்பம்
தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் ஒருவாரத்துக்கு முன்னர் சம்பந்தப்பட்ட கைதிக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் சிங்கப்பூர் சிறைத்துறை அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கிறது.
அதன் பிறகு கைதியும் குடும்பத்தினரும் அனுபவிக்கும் மன உளைச்சலை வார்த்தைகளில் விவரிக்க இயலாது என்கிறார் கோகிலா.
தூக்குத்தண்டனையை எதிர்நோக்குபவரின் சின்னச்சின்ன ஆசைகளை நிறைவேற்றுகிறது சிங்கப்பூர் சிறைத்துறை. அதன்படி, மரண தண்டனைக் கைதி தனக்குப் பிடித்தமான உடையை அணிந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.
குடும்பத்தாருக்கு விவரம் தெரிவித்து, தமக்குப் பிடித்தமான உணவுகளைக் கொண்டு வரச் செய்து சாப்பிடலாம்.
தங்கராஜுவுக்கு இந்தச் சலுகைகள் வாய்த்தன. அவரும் தனது குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவித்து, சிக்கன் ரைஸ், பிரியாணி, ஐஸ்கிரீம் சோடா, மைலோ பானத்தின் சுவைகொண்ட இனிப்புகள் ஆகியவற்றைச் சாப்பிட்டுள்ளார்.
எனினும், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் அதிகமாக உணவு உட்கொண்டதில் தனது உடல் எடை சுமார் பத்து கிலோ அளவுக்கு கூடிவிட்டதாகவும் அதன் காரணமாக தினமும் ஒருவேளை மட்டுமே சாப்பிடுவதாகவும் தங்கராஜு கூறியுள்ளார்.
“எடை கூடிவிட்டால் தூக்கிலிடப்படும்போது எனது உயிர் பிரிய அதிக நேரம் பிடிக்குமோ என்னவோ?” என்றும் அவர் குடும்பத்தாரிடம் கூறினாராம்.
எந்தவிதமான சலனமும் இன்றி அவர் இவ்வாறு குறிப்பிட்டதை வாழ்நாள் முழுவதும் மறக்கவே இயலாது என்கிறார் தங்கராஜுவின் சகோதரி லீலா.
“எதிர்பார்த்த நிகழ்வுதான். எனினும், சக மனிதனின் உயிரிழப்பை ஜீரணித்துக்கொள்வது அவ்வளவு எளிதல்ல,” – கோகிலா
ஒரு வாரத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும், வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உள்ள கைதி, தன்னைப்போன்றே மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கும் மற்ற கைதிகளுக்கும் பிடித்த உணவுகளை வாங்கிக்கொடுக்கலாம்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட தங்கராஜு, மீன் பர்கர், curry puffs (சமோசா போன்ற தின்பண்டம்), குளிர்பானங்கள் ஆகியவற்றை வாங்கித் தந்துள்ளார்.
இறக்கும் முன்னர் புகைப்படம் எடுத்துக்கொள்ள தங்கராஜு விரும்பவில்லை. எனினும் குடும்ப உறவினர் ஒருவர் விடுத்த உருக்கமான வேண்டுகோளை அடுத்து அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள சம்மதித்துள்ளார்.
“குடும்பத்தாருடன் கடந்த காலங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எடுத்து வரச் செய்து, அவற்றைப் பார்த்து பழைய நினைவுகளில் மூழ்கிப்போனார். அந்த இனிமையான நினைவுகள் தன்னை தூங்கவிடவில்லை என்றும் பின்னர் கூறினார்.
தண்டனை நிறைவேற்றப்பட சில மணி நேரங்கள் மட்டுமே இருந்த நிலையில், தங்கராஜு சார்பில் கடைசி நேர முயற்சியாக சிங்கப்பூர் அதிபரிடம் மேலும் ஒரு கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் பலன் இல்லை.
“தங்கராஜுவின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை”
“அப்பு (தங்கராஜுவை இப்படியும் குறிப்பிடுகிறார்) தனக்குப் பிடித்தமான இசையைக் கேட்டு ரசிக்க, சிடீக்களை வாங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. எனினும் சிடீக்கள் வாங்கும் பொருட்டு பணம் செலவழிக்க விரும்பவில்லை. அந்தத் தொகையை குடும்பத்துக்கு அளிக்க விரும்பினார்.
“ஒருவேளை மட்டுமே உணவருந்தினால் எனது எடை குறைவாக இருக்கும். அதனால் என் சடலத்தை தூக்கிச் செல்பவர்களின் சிரமும் குறையும் அல்லவா?” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
“தங்கராஜுவின் இரண்டு இறுதி ஆசைகளை எங்களால் நிறைவேற்ற முடியாமல் போனது. மலேசியாவின் சிலாங்கூர் நகரில் உள்ள கோவிலில் இருந்து ஹனுமன் ரூத்ராட்சியும் குங்குமமும் வேண்டும் என்று கேட்டார். அவற்றுக்கு ஏற்பாடு செய்தோம்.
“எனினும் சிறைத்துறை அவற்றை தங்கராஜுக்கு அளிக்க அனுமதிக்கவில்லை. அவரது உயிரை எடுத்துக்கொள்ளும் நிலையில், இதுபோன்ற சிறு விருப்பங்களையும் அவர்கள் அனுமதிக்க மறுப்பது ஏன்?” என்று தங்கராஜுவின் குடும்பத்தார் கேள்வி எழுப்புகின்றனர்.
“தூக்கிலிடப்படும் முன்பு சிறைக் காவலர்கள் தனக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ள இடத்தை காண்பிப்பர் என்றும் தூக்கிலிடப்படும் முறை குறித்து விவரிப்பர் என்றும் குடும்பத்தாரிடம் தங்கராஜு கூறியுள்ளார். இதற்கு முன்பு எந்தக் கைதியும் இவ்வாறு தகவல் தெரிவித்ததில்லை என்றே நினைக்கிறேன்.
“தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் தங்கராஜுவின் பொருள்களை சிறை நிர்வாகம் அவரது குடும்பத்தாரிடம் அளித்தது. இத்தகவலை அவரது குடும்பத்தார் என்னிடம் தெரிவித்தபோது அவர்களுடைய குரலில், இழப்பால் ஏற்பட்ட ஒருவித நடுக்கம் இருப்பதை உணர்ந்தேன். இனி தங்கராஜுவை பார்க்க இயலாது. இந்நிலையில் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அப்பொருள்களைப் பார்க்கும்போது குடும்பத்தாருக்குப் பலதரப்பட்ட உணர்வுகள் ஏற்படவே செய்யும்.
“தங்கராஜவின் உடைகள், கைதாகும்போது அவர் அணிந்திருந்த மோதிரம், காலணிகள், கையில் கட்டியிருந்த புனித கயிறு ஆகியவற்றை மட்டுமே இனி அவரது நினைவாக குடும்பத்தார் வைத்திருக்க இயலும்,” என்கிறார் கோகிலா.
தூக்கில் இருந்து தப்பித்தவரின் அனுபவங்கள்
“சிங்கப்பூரில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி ஏழு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒருவர் கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.
தூக்கிலிடப்படுவது உறுதியான நிலையில், மரண தண்டனைக் கைதி ஒருவர் அளிக்கும் ‘சிறை விருந்துபசாரம்’ குறித்து என்னிடம் பேசினார் அவர்.
“அப்போது, “அடுத்த ஓரிரு நாள்களில் மரணத்தை தழுவப்போகும் ஒரு மனிதர் நமக்கு அளிக்கும் விருந்தை எவ்வாறு ஏற்க முடியும். தட்டில் உள்ள உணவை எவ்வாறு சாப்பிட முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“அவ்வாறு அளிக்கப்படும் உணவையும் பானங்களையும் உட்கொள்ளும்போது ஒருவகையில் பயமாக இருக்கும் என்றார் அவர். என்னால் அவருக்குப் பதிலளிக்க முடியவில்லை,” என்கிறார் கோகிலா.
பட மூலாதாரம், Getty Images
நியாயமான முறையில் விசாரணை நடந்தது என சிங்கப்பூர் அரசு விளக்கம்
இதற்கிடையே எந்தவொரு குற்றத்திலும் ஈடுபடாத ஒருவருக்கு (தங்கராஜ்) சிங்கப்பூர் அரசாங்கம் தூக்கு தண்டனை வழங்கியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை அந்த அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அவர் போதைப்பொருள்களை விநியோகித்தார் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளதாக சிங்கப்பூர் உள்துறை அமைச்சு கூறியுள்ளது.
தங்கராஜு தனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி அளிக்கப்பட்டதாகவும் போதைப்பொருள் (கஞ்சா) விநியோகத்திற்கு அவரது கைபேசி எண்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
“தங்கராஜு மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நியாயமான, வெளிப்படையான விசாரணை நடந்துள்ளது. சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது என்று நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.
“அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இருந்தன. எனினும் குற்றச் செயல்களில் தாம் ஈடுபடவில்லை என்று தங்கராஜு கூறுவதை ஏற்பதற்கில்லை,” என்று உள்துறை அமைச்சு மேலும் தெரிவித்தது.
சிங்கப்பூரில் போதைப்பொருள் பயன்பாடு, கடத்தலுக்கு எதிரான அரசாங்கத்தின் கடுமையான நிலைப்பாட்டுக்கும் சட்டங்களுக்கும் அந்நாட்டு மக்கள் மத்தியில் பலத்த ஆதரவு உள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ ஊடகம் நடத்திய ஆய்வின்போது 95% பேர் நடைமுறையில் உள்ள சட்டங்கள் தொடர வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர்.
சிங்கப்பூர் அரசாங்கத்தின் சட்டங்களை குடிமக்களில் பெரும்பாலானோர் வரவேற்பதாக கூறப்பட்டாலும், தற்போது நிலைமை மாறி வருகிறது என்கிறார் சமூக செயல்பாட்டாளரான கிர்ஸ்டன் ஹென் (Kirsten Han).
பிபிசி தமிழிடம் பேசிய அவர், இதற்கு முன்பு போதைப்பொருள் சார்ந்த குற்றத்தில் சிக்கிய அறிவுசார் குறைபாடு உள்ளதாகக் கூறப்படும் இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம் தூக்கிலிடப்படுவதை தடுத்து நிறுத்த இணையம் வழி விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று ஆன்லைன் மனுவில், சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டதை சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையே சில கடுமையான குற்றச்செயல்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் சண்முகம் கூறுகிறார்.
போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க அத்தண்டனை பயனளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்படுவதை அரசாங்கம் விரும்புவதில்லை. அதேசமயம் மக்களுக்கு எது சிறந்ததோ அதை அரசாங்கம் தொடர்ந்து செய்யவேண்டும்,” என்றும் அமைச்சர் சண்முகம் இதற்கு முன்பு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: