நேற்றைய போட்டியில் விளையாடிய கொல்கத்தா, ஐதராபாத் இரண்டுக்குமே இன்னும் அரையிறுதி வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சம் இருக்கிறது என்றாலும், ஒரு அணி தொடர் காயங்களால் பாதிக்கப்பட்டிருக்க இன்னொரு அணியோ அதன் திறமைக்கேற்ப இதுவரையில் விளையாடவில்லை என்கிற சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த சீசனின் 36வது போட்டிதான் ஐதராபாத் கடைசியாக வென்றது. நேற்று ஐதராபாத் விளையாடியது சீசனின் 61வது போட்டி. தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வென்று, பின்பு தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் தோற்றிருக்கிறது.
மறுபுறம், கொல்கத்தா இந்த சீசனில் ஐந்து முறை தன்னுடைய தொடக்க இணை ஆட்டக்காரர்களை மாற்றியிருக்கிறது. வெங்கடேஷ் ஐயர் & ரஹானே, ஆரோன் ஃபின்ச் & இந்திரஜித், ஃபின்ச் & வெங்கடேஷ் ஐயர், சாம் பில்லிங்ஸ் & சுனில் நரைன், ஃபின்ச் & நரைன் என எப்படி எப்படியோ தொடக்க வீரர்களை மாற்றியாயிற்று. ஆனால், இந்த சீசனில் ஒட்டுமொத்தமாகவே ஒருமுறைதான் 50 ரன்களை விக்கெட் இழக்காமல் கொல்கத்தா அடித்திருக்கிறது. காயங்கள் ஐதராபாத்தை துரத்துகிறது என்றால், கொல்கத்தாவிலோ ஃபார்ம் அடி வாங்கிக்கொண்டிருந்தது.
ஐந்து நாள்கள் இடைவெளிக்குப் பின்னர் வந்திருந்த ஐதராபாத் அணியில் மீண்டும் நடராஜனும், சுந்தரும் இருந்தார்கள். தன் நூறாவது ஐபில் போட்டியை விளையாடிய ஸ்ரேயாஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.