
அர்ஜென்டினா மக்கள் இப்போது மகிழ்ச்சியில் திளைத்திருக்கக் காரணம்… மெஸ்ஸி எனும் வீரன். இந்த நீண்ட நெடிய பயணத்தில் அவருடன் வழிநெடுக இருந்தது, அவரின் காதல் மனைவி அன்டோனெல்லா ரோகுஸோ.

இதில் அழகு என்னவென்றால், இவர்கள் பால்ய கால சிநேகிதர்களாக வளர்ந்து, காதலர்களாகி, தம்பதியாக இணைந்தவர்கள்.

1987-ம் ஆண்டில், அர்ஜென்டினாவின் ரொசாரியோ பகுதியில் பிறந்தவர் லயோனல் ஆண்ட்ரஸ் மெஸ்ஸி. அன்டோனெல்லா ரோகுஸோ 1986-ல் பிறந்தார்.

9 வயதான மெஸ்ஸி, தன் நண்பன் லுகாஸ் ஸ்காக்லியா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, நண்பனின் உறவுக்கார பெண்ணான அன்டோனெல்லா ரோகுஸோவை முதன்முதலில் பார்த்தார்.

கூடிய விரைவிலேயே இருவரும் நண்பர்களானபோது, மெஸ்ஸிக்கு அப்பெண் தன்னுடைய வாழ்நாள் முழுதும் உடன் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழ்மனதில் இருந்தது.

2000-ம் ஆண்டில் மெஸ்ஸியின் தந்தை தன்னுடைய குடும்பத்துடன் ஸ்பெயின், பார்சிலோனாவிற்கு சென்றார். 12 வயதில் மெஸ்ஸி, பார்சிலோனா சாக்கர் அணியில் சேர்ந்து, கால்பந்தாட்ட லட்சியத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

தன் தோழியின் இறப்பினால், படிப்பைத் தொடராமல் அன்டோனெல்லா வீட்டிலேயே முடங்கி இருக்க, அர்ஜென்டினா விரைந்து அவரை ஆற்றுப்படுத்தினார் மெஸ்ஸி. அப்போதுதான் அவர்கள் உறவு ஆழமாக வேரூன்றியது. மெஸ்ஸி மீண்டும் பார்சிலோனாவிற்கு சென்றார்.

அன்டோனெல்லா மனிதநேயம் மற்றும் சமூக அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். பல் மருத்துவம் படிக்க விருப்பப்பட்டவர், ஆறு மாதங்களுக்குப் பின், படிப்பை விடுத்து ஸ்பெயின் சென்று மெஸ்ஸியுடன் இருக்க முடிவு செய்தார்.

அன்டோனெல்லா ரோகுஸோ, மாடலாக பணியாற்ற ஆரம்பித்தார். இவருக்கு சமூக வலைதளத்தில் 26 மில்லியன் ஃபாலோயர்கள் உண்டு.

2009-ல் பொதுமக்களுக்கு இவர்களின் உறவு தெரிய வந்தது. இவர்கள் இருவரும் 2017, ஜூன் 30-ல் சொந்த ஊரில் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு தியாகோ, மேடியோ மற்றும் சிரோ என மூன்று மகன்கள் உள்ளனர்.

2019-ல் ஒரு நேர்காணலில் மெஸ்ஸி தன் மனைவி குறித்து பேசுகையில்,`வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கக்கூடிய புத்திசாலி’ என்றார்.

முதலில் நண்பர்கள்.. பின் காதலர்கள்.. இப்போது உலகமே ரசித்துப் பார்க்கும் ஜோடிகள்..! Let Love Grow!