ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்து சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட உள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை மையத்தினை தேர்தல் பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் மற்றும் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நிருபர்களிடம் கூறுகையில், ‘77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கால தாமதத்தை தடுக்கும் வகையில் 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தரைதளத்தில் உள்ள அறையில் 10 மேஜைகளும், மேல் தளத்தில் உள்ள அறையில் 6 மேஜைகளும் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மேஜையிலும் 3 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியினை மேற்கொள்ள உள்ளார்கள். வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக 234 புகார்கள் பெறப்பட்டு அதில் 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கலெக்டர் கூறினார்.