சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்காகப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளில், மதுமேகச் சூரணம், திரிபலா சூரணம், ஆவாரைக் குடிநீர், சீந்தில் மாத்திரை போன்றவை பிரபலமானவை. இவை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிடைக்கும். இவை நான்குமே நல்ல பலனைத் தரக்கூடியவை. மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொண்டு அவ்வப்போது சர்க்கரை அளவைச் சரிபார்த்து வந்தால், எந்தபாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க முடியும். மருந்துகள் மட்டுமன்றி உணவுரீதியாகவும் கவனம் செலுத்த வேண்டும். வெந்தயம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நார்ச்சத்து (Fiber) மிகுந்த உணவுகளை அதிகம் எடுக்க வேண்டும். வயதிற்கு ஏற்ப அளவோடு சாப்பிட வேண்டும். மாவுச்சத்தைக் (Carbohydrates) குறைத்துவிட்டுப் புரதச்சத்து (Protein) அதிகமாக இருக்கும் முறையைப் பின்பற்றலாம். நிறைய காய் மற்றும் கீரை வகைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். 60 வயதில் நுண்ஊட்டச்சத்து (Micronutrients) குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் பழங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. திராட்சை, சாத்துக்குடி, மாதுளம்பழம் மற்றும் அந்தந்தக் காலங்களில் கிடைக்கும் நாவல் பழம், விளாம்பழம் போன்றவற்றை மாற்றி மாற்றி எடுத்துக்கொள்ளலாம். மூட்டுவலி போன்ற உபாதைகள் இல்லை என்றால் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சியைத் தொடர வேண்டும். நல்ல உறக்கம் மற்றும் சரியான உணவுமுறையைப் பின்பற்றினால் சர்க்கரை நோயிலிருந்து எளிதாக வெளியே வந்துவிடலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.