3-வது டி20-ல் இந்தியா வெற்றி – பந்து வீச்சு சிறப்பாக இருந்தது என கேப்டன் ரிஷப் பந்த் பாராட்டு | Ind vs SA – indian captain happy after 1st victory

Share

செய்திப்பிரிவு

Last Updated : 16 Jun, 2022 06:34 AM

Published : 16 Jun 2022 06:34 AM
Last Updated : 16 Jun 2022 06:34 AM

விசாகப்பட்டினம்: இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 5 ஆட்டங்கள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட்தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 2 ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா வென்ற நிலையில் நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் 3-வது ஆட்டம் நடைபெற்றது.

முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் கெய்க்வாட் 57, இஷண் கிஷண் 54, ஹர்திக் பாண்டியா 31 ரன்கள் எடுத்தனர். பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 19.1 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இந்திய அணி சார்பில் ஹர்ஷல் பட்டேல் 4, யுவேந்திர சாஹல் 3 விக்கெட்களை வீழ்த்தி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.

இந்திய அணியின் வெற்றி குறித்து கேப்டன் ரிஷப் பந்த் கூறியதாவது: முதல் 2 போட்டிகளில் தோல்வி கண்டதால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். இந்தப் போட்டியில் நாங்கள் 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம் என்று நினைத்தோம். ஆனால் அதை பற்றி அதிகம் யோசிக்கவில்லை. போட்டியின்போது பந்துவீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டனர்.

குறிப்பாக இந்தியாவில் மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். இதனால் அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய அழுத்தம் உள்ளது. இதுபோன்ற போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படும்போது வெற்றி கிடைக்கும் என்று நம்பினோம். பேட்டிங்கின்போது நடுவரிசையில் சிறப்பாக நாங்கள் செயல்படவில்லை.

ஆனால் ஒரு நல்ல தொடக்கத்துக்கு பிறகு புதிய பேட்ஸ்மேன்கள் உடனே அதிரடியாக விளையாடுவது கடினம். இதில் அடுத்த போட்டியில் முன்னேற முயற்சிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com