ஏமன் நாட்டைச் சேர்ந்த 29 வயதான இளைஞர் ஒருவர், 18 ஆண்டுகளாகத் தன் தலையில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான இவர், ஏமனிலுள்ள ஒரு குக்கிராமத்தில் தன்னுடைய மூன்று சகோதரர்கள், மூன்று சகோதரிகளுடன் (மொத்தம் ஆறு பேர்) வளர்ந்தவர். அவரின் குடும்பம், விவசாயப் பின்னணி கொண்டதாகும். இளைஞரின் தந்தை, வீட்டுக்கு அருகிலிருக்கும் பண்ணையில் விவசாயம் செய்து காய்கறிகள், பழங்களைப் பயிரிட்டு அதில் கிடைப்பதை வைத்து, குடும்பத்தை நடத்தி வந்தார்.
இந்தச் சூழலில் இளைஞருக்கு 10 வயதாக இருக்கும்போது, அவர் வாழ்க்கை இப்படி மாறும் என அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்போலும்… சந்தை வீதிகளில் வீட்டுக்குத் தேவையானவற்றை வாங்கிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, இரு போராட்டக் குழுவினருக்கிடையேயான மோதலில் சிக்கிக்கொண்டார். அதில் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர், அதில் ஒரு குண்டு இந்த இளைஞரின் காது வழியாகத் தலையில் பாய்ந்து சென்று, சிக்கிக்கொண்டது. அதில் பலத்த காயமடைந்த அவர், ரத்தப்போக்கு ஏற்பட்டுத் துடிதுடித்துப்போனார்.
அதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அப்போது அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள், அவர் தலையில் பாய்ந்த குண்டை அகற்றாமலே, வெறுமனே மருந்துவைத்துக் கட்டி, அனுப்பியிருக்கின்றனர்.
துப்பாக்கிக் குண்டு காது வழியாகத் துளைத்ததால், நாள்கள் செல்லச் செல்ல காதினுடைய நுழைவு துவாரம் சுருங்கியதோடு மட்டுமன்றி, தலையிலுள்ள எலும்புகளில் பாய்ந்து ஆறாத காயத்தையும், காதுக்குள் அதிக ரணத்தையும் ஏற்படுத்தியது. இதனால் அடிக்கடி தலைவலி, தலையில் அழுத்தம், காது மடலிலிருந்து சீல்வடிதல் உள்ளிட்டவற்றால் மிகக் கடுமையாக அவதிப்பட்டுவந்தார். ஒருகட்டத்தில் இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண விரும்பிய அவர், சிகிச்சை மேற்கொண்டு தலையிலிருந்து துப்பாக்கிக் குண்டை நீக்க வேண்டும் என நினைத்து, பெங்களூரின் பிரபலமான ஆஸ்டர் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றிருக்கிறார். ஆனால் அங்கு, அறுவை சிகிச்சை மிகக் கடினமாக இருக்கும் என்றும் இந்த அறுவை சிகிச்சையில் அவர் உயிரிழக்கக்கூட வாய்ப்பிருப்பதாகவும் ஆஸ்டர் மருத்துவமனையின் இ.என்.டி மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.