புவனேஷ்வர்: ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றால் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். வரும் 13-ம் தேதி இந்த தொடர் ஒடிசா மாநிலத்தில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலாவில் உள்ள இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. மொத்தம் 16 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. தொடரை நடத்தும் அணி என்ற அந்தஸ்துடன் இந்தியா இதில் பங்கேற்கிறது. இந்திய அணி ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் வேல்ஸ் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.
இந்த சூழலில் தொடரில் பங்கேற்கும் வகையில் ஒடிசாவில் முகாமிட்டுள்ள இந்திய அணி வீரர்களை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் சந்தித்தார். அப்போது இந்திய அணி உலகக் கோப்பையை வென்றால் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அதோடு இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018-இல் ஹாக்கி உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்தி இருந்தது ஒடிசா என்பது குறிப்பிடத்தக்கது.
Today, Chief Minister @Naveen_Odisha interacted with the National Men’s Hockey Team who are accommodated at the World Cup Village & announced an award of Rs 1 Cr for each player if #TeamIndia lifts the World Cup. He wished them the very best & hoped they will emerge champions. pic.twitter.com/E1lnShNhfV
— Odisha Sports (@sports_odisha) January 5, 2023