ஷங்கர் இயக்கத்தில் 2003-ல் வெளிவந்த ‘பாய்ஸ்’ படத்தை யாருமே மறந்திருக்க மாட்டோம். டீன் ஏஜ் பிள்ளைகளின் மனநிலை, ஆசைகள், எதிர்பார்ப்புகள், பிரச்னைகள் என்று இளைய தலைமுறையினரை பற்றி தெளிவாக எடுத்துச் சொன்ன படம் அது.
அந்தப் படத்தில் வருகிற ஐந்து பாய்ஸும் ஒரு செக்ஸ் வொர்க்கரிடம் செல்வார்கள். அதனையொட்டி அவர்கள் சில பிரச்னைகளையும் சந்திப்பார்கள். கிட்டத்தட்ட அதே போன்றதொரு கேஸ் ஹிஸ்டரியைத்தான், இன்றைய காமத்துக்கு மரியாதையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் நம்மிடம் பகிரவிருக்கிறார்.

“அவர்கள் பிளஸ் டூ மாணவர்கள். பத்து பேர் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு ஒரு மலைவாசஸ்தலத்துக்கு டூர் சென்றிருக்கிறார்கள். ‘ஜஸ்ட் ஃபார் ஃபன்’ என்று ஒரு செக்ஸ் வொர்க்கரிடம் செல்கிறார்கள். அதில் ஒரேயொரு பையன் மட்டும், முதிர்ச்சியான ஆண்போல அந்த செக்ஸ் வொர்க்கரிடம் உறவு கொள்கிறான்.
எல்லாம் முடிந்த பிறகு பத்து பேரும், தங்கள் அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள, அப்போது, தங்களில் ஒருவன் மட்டும் நன்றாக பெர்ஃபார்ம் செய்திருக்கிறான் என்பது மற்ற மாணவர்களுக்குத் தெரிய வருகிறது.
பொறாமை, எரிச்சல், கேலி… இவற்றில் ஏதோவோர் உணர்வுக்கு ஆட்பட்ட மற்ற மாணவர்கள், ‘டேய், செக்ஸ் வொர்க்கர்கிட்ட இன்டர்கோர்ஸ் வெச்சுக்கிட்டதால உனக்கு எய்ட்ஸ் வரப்போகுது… உன் ஆண்மை இதோட போயிடப்போகுது…’ என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த விஷயம் மெள்ள மெள்ள மற்ற மாணவர்கள் மத்தியில் பரவ ஆரம்பித்திருக்கிறது. அவர்களில் சிலரும் அந்த 9 மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு, ‘ஆமாம்டா… உன் ஆண்மை போகப் போகுது’ என்று பயங்காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் ‘போங்கடா’ என்று அலட்சியப்படுத்திய அந்த மாணவன், ஒருகட்டத்தில் ‘அவர்கள் சொல்வதுபோல தனக்கு ஆண்மை குறைந்து விடுமோ’ என்று பயப்பட ஆரம்பித்திருக்கிறான். பிறகு, அதை நம்பவும் ஆரம்பித்திருக்கிறான். விளைவு மிகத் தீவிரமான உளவியல் பிரச்னையில் சிக்கி விட்டான்.
பள்ளிக்கூடம் போக மாட்டேன் என்று அடம்பிடிக்க ஆரம்பித்திருக்கிறான். தன் பிள்ளைக்கு என்ன நடந்தது என்று அவன் நண்பர்களிடம் விசாரித்த அவனுடைய அப்பாவுக்கு எல்லா உண்மைகளும் தெரியவர, அவனை என்னிடம் அழைத்து வந்தார். அவனிடம் பேசிப் பார்த்ததில் மிக மோசமான மனநிலை பாதிப்பில் இருக்கிறான் என்பது தெரிய வந்தது. உடனடியாக மனநல மருத்துவரிடம் அனுப்பி வைத்தேன். சிகிச்சைக்குப் பிறகு பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்தான்.
சிறுவயதில் செக்ஸ் வொர்க்கரிடம் சென்றுவிட்டு, பயத்துடன் என்னைச் சந்திக்க வருகிற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகி இருக்கிறது. இதைத் தவிர, பள்ளிக்கூட மாணவர்களிடம் இன்னும் இரண்டு பிரச்னைகள் இருப்பதையும் என் அனுபவத்தில் கவனித்து வருகிறேன்.
சில மாணவர்களுக்கு மார்பகம் பெரிதாக இருக்கும். அந்த மாணவர்களின் மார்பை மற்ற மாணவர்கள் கிள்ளுவது… ஒன்றாக சிறுநீர் கழிக்கச் செல்கையில் ‘உன்னோடது சின்னதா இருக்குது’ என்று கேலி செய்வது ஆகியவையும் சம்பந்தப்பட்ட மாணவர்களை மனதளவில் பாதிக்கிறது. கேலி செய்கிற மாணவர்கள் விபரீதம் தெரியாமல்தான் செய்கிறார்கள். ஆனால், பாதிக்கப்படுகிற மாணவர்களின் ஆளுமையை, கம்பீரத்தை கிட்டத்தட்ட நாசம் செய்து விடுகிறார்கள்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போதும், வெளியூர் டூர் போகும்போதும் செக்ஸ் வொர்க்கர்களுடன் உறவு வைத்துக் கொள்வதை இன்றைய டீன் ஏஜ் இளைஞர்கள் ஜாலியான விஷயமாகப் பார்க்கிறார்கள். இது அவர்களுடைய உடலுக்கும் நல்லதல்ல.. மனதுக்கும் நல்லதல்ல…
பெற்றோர்கள் இந்த விஷயத்திலும் தங்கள் பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும்” என்று அறிவுறுத்துகிற டாக்டர் காமராஜ், மார்பகம் பெரிதாக இருக்கிற இளைஞர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் தங்களுடைய பிரச்னையை சரி செய்து கொள்ளலாம். அதை 22 வயதில் செய்வதே நலம். வளரும் வயது என்பதால் அதற்கு முன்னால் செய்தால் மார்பகம் மறுபடியும் வளரும் என்பதையும் குறிப்பிடுகிறார்.