தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் செல்லுலோஸ், அமைலேஸ் போன்ற என்சைம்களை உற்பத்தி செய்வதற்கு அதிக செலவு செய்யப்படுகிறது. இதற்கு மாற்றாக வேளாண் கழிவுகளிலிருந்து தயாரிக்கலாம் என்பதை சென்னை ஐ.ஐ.டி கண்டுபிடித்துள்ளது. இதற்கு மத்திய அரசும் அனுமதியளித்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் சத்தியநாராயணன் கும்முடி மற்றும் மாணவி ரேகா ராஜேஷ் இணைந்து, கரும்பிலிருந்து பயோ எத்தனால் மற்றும் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் நொதிகளான செல்லுலேஸ் (cellulaze), அமைலேஸ் (amylase) என்ற இரண்டு பொருட்களை உற்பத்தி செய்வது குறித்து கண்டுபிடித்துள்ளனர்.
சத்தியநாராயணன் ஐ.ஐ.டியில் உயிர்தொழில்நுட்பத்துறை (bio technology) பேராசியராக பணிபுரிகிறார். கடந்த பல ஆண்டுகளாக ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ரேகா ராஜேஷ், தனியார் கரும்பு தொழிற்சாலையில் பணிபுரிகிறார். இவர் சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார்.
இருவரும் இணைந்து செய்திருக்கும் புதிய ஆராய்ச்சி பற்றி பேசினோம்…
“எங்களின் ஆராய்ச்சி இரண்டு நிலையில் உள்ளன. முதல் நிலையில் கரும்பிலிருந்து பேசில்லஸ் எஸ்.பி.பி.எம்-06 என்ற பாக்டீரியாவை தனியாக பிரித்து எடுக்க வேண்டும். அதன் பின்னர் பேசில்லஸ் பாக்டீரியாவை அதிக வெப்ப நிலையில் வளர்த்தோம். அதற்கு தேவையான கார்பன், நைட்ரஜன் போன்றவற்றை அவ்வப்போது கொடுத்து பாக்டீரியா என்ன மாதிரியான என்சைம்களை உற்பத்தி செய்கிறது என்று கவனித்தோம். பேசில்லஸ் பாக்டீரியா செல்லுலேஸ், அமைலேஸ் என்ற இரு என்சைம்களையும், பயோ எத்தனாலையும் உற்பத்தி செய்வதைக் கண்டறிந்தோம். எங்களின் ஆராய்ச்சிக்கு வி பிராண்ட் வேளாண்மைக் கழிவுகளையே பயன்படுத்தினோம். வி பிராண்ட் வேளாண்மைக்கழிவுகள் இந்தியாவில் அதிகளவில் உற்பத்தியாக கூடியது, என்சைம் உற்பத்தியை அதிகப்படுத்த கூடிய தன்மை உடையது.