சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பெரும்பாலான பள்ளங்களில் பணிகள் நிறைவடையவில்லை. மழைநீர் வடிகால் பணிகளில் 95 சதவீதம் முடிந்து விட்டதாக மேயரும், 70 சதவீதம் நிறைந்து விட்டதாக மாநகராட்சியும் கூறினாலும் கூட, பெரும்பான்மையான இடங்களில் துண்டு துண்டாக அமைக்கப்பட்ட கால்வாய்கள் இன்னும் இணைக்கப்படவில்லை. இன்னும் பல இடங்களில் மழைநீர் வடிகால்களுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டாலும், பக்கவாட்டு சுவர்களும், மேல்தளமும் இன்னும் அமைக்கப்படவில்லை. அத்தகைய இடங்களில் தான் மழைநீர் தேங்குகிறது. இது மிகவும் ஆபத்தானது. இதே நிலை நீடித்தால் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அவற்றை தவிர்க்கும் வகையில் கால்வாய் அமைக்கும் பணிகளையும், அமைக்கப்பட்ட இடங்களில் இணைப்பு பணிகளையும் சென்னை மாநகராட்சி விரைந்து அமைக்க வேண்டும்.