வெளியில் இருந்து உணவு மற்றும் பானங்களை மல்டிபிளக்ஸ்கள், திரையரங்குகளுக்குள் எடுத்துச் செல்வதைக் கட்டுப்படுத்த, திரையரங்க உரிமையாளருக்கு உரிமை உண்டு என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில், அம்மாநில அரசு வகுத்துள்ள விதிகளின்படி, திரையரங்குகளில் பார்வையாளர்கள் வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளை அனுமதிக்க வேண்டும் என்று, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் 2018-ம் ஆண்டு தீர்ப்பை எதிர்த்து, திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிஃபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் திரையரங்க உரிமையாளர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன், ’திரையரங்க வளாகங்கள் பொதுச்சொத்து அல்ல. அதனுள் செல்வதற்கான அனுமதி, திரையரங்க உரிமையாளரால் வழங்கப்படுகிறது. மேலும், பார்வையாளர்கள் உள்ளே உணவை வாங்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை’ என்று வாதிட்டார்.