சென்னை: சட்டப்பேரவையில் தினமும் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவரை வைத்து அதிமுகவை குறை சொல்லி பேச வைக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். சட்டப்பேரவையில் வெளியேற்றப்பட்ட பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை விபத்து, மதுரை சித்திரை திருவிழா விபத்து போன்றவற்றுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யாததே காரணம் என கூறி வெளிநடப்பு செய்தோம். நாங்கள் வெளிநடப்பு செய்த பிறகு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வபெருந்தகை வேண்டுமென்றே திட்டமிட்டு, 1992ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கும்பகோணத்திலே மகாமகம் நிகழ்ச்சி பற்றி பேசியிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை அதிமுகவை குறை சொல்லிதான் பேசிக்கொண்டிருக்கிறார். 1992ம் ஆண்டு நடந்த சம்பவம். இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை. அதுவும் முன்னாள் முதலமைச்சர் உயிரோடும் இல்லை. இறந்துவிட்டார். அவர் பெயரை வேண்டுமென்றே திட்டமிட்டு, பேசி அவையில் பதியவைக்கிறார். அதனை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். அதனை நிராகரித்து விட்டார்கள் ஒரு எதிர்க்கட்சி ஜனநாயக முறைப்படி, ஜனநாயக கடமையாற்றி இருக்கின்றோம். இதனை வேண்டுமென்றே திட்டமிட்டு காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையை விட்டு, அதிமுகவை குறை சொல்லி பேசிக்கொண்டே இருக்கின்றார்கள். இது வன்மையாக கண்டிக்கதக்ககது.இவ்வாறு அவர் கூறினார்.
வெளிநடப்புக்கு பின் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு: ஒவ்வொரு முறையும் அதிமுகவை குறை கூறுகிறார்
Share