ஈரோடு: விருப்ப மனு பெற்ற பிறகு அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே அதிமுக தேர்தல் பணிமனை அமைப்பதற்கான கால்கோள் பூஜை இன்று காலை நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமை வகித்து கால்கோள் பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இங்கு நாங்கள் அமைதியாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்வோம். அதற்காக இன்று தேர்தல் பணிமனை அமைப்பதற்கு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விருப்ப மனு பெற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறிவிப்பார். மக்களிடையே மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவுக்கே மக்கள் ஆதரவு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம். 1972 திண்டுக்கல் தேர்தல் போல, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தமிழகத்தில் திருப்புமுனையாக அமையும். திமுக தேர்தல் பணிக்குழுவில் அமைச்சர்கள் இடம் பெற்றிருப்பது வழக்கம்தான்.
நாங்களும் பணிகுழு அமைத்து தேர்தல் பணியை துவக்குவோம். இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான் கிடைக்கும். அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலிமையுடன் போட்டியிட்டு வெற்றி பெறும். ஓ.பன்னீர்செல்வம் கருத்து, பா.ஜ. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடுக்கு ‘பொறுத்திருந்து பாருங்கள்’.