கோடைக்காலம் ஆன் தி வே. வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கும் முன்பே வியர்வை பாடாய் படுத்த ஆரம்பித்துவிட்டது. வியர்வை என்றால்கூட சமாளித்துவிடலாம். வியர்வையோடு வரும் வாடைதான் சமாளிக்கக் கடினமானது. வியர்வை வாடையைக் கட்டுப்படுத்தும் வழிகளைச் சொல்கிறார் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.
வியர்வை வாடைக்குக் காரணம்…
வியர்வையில் சில வகைப் புரதங்கள் இருக்கும். அவற்றுடன் பாக்டீரியா சேர்ந்து வினைபுரியும்போது அந்தப் புரதங்கள் அமிலங்களாக மாறுகின்றன. அவைதான் வியர்வை நாற்றத்துக்குக் காரணம்.
பூப்பெய்தும் பருவம், பருமன், அதிக காரமான மசாலா சேர்த்த உணவுப்பழக்கம், நீரிழிவு போன்ற சில உடல்நலக் குறைபாடுகள் போன்றவை வியர்வையைத் தூண்டும் காரணிகள். வியர்வைக்கென பிரத்யேக மணமோ, நிறமோ கிடையாது. பாக்டீரியா மற்றும் அதன் தாக்கத்தால் வெளியேறும் அமிலங்களின் காரணமாகவே வியர்வைக்கென பிரத்யேக வாடை உருவாகிறது.
எக்ரைன், அப்போக்ரைன் என இரண்டு வகையான வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. எக்ரைன் சுரப்பிகள் உடல் முழுவதும் இருக்கும். குறிப்பாக உள்ளங்கைகள் மற்றும் பாதங்களில் அதிகமிருக்கும். எப்போக்ரைன் சுரப்பிகள் அக்குள், அந்தரங்க உறுப்புகள், காதுகளின் பின்புறம் போன்ற பகுதிகளில் அதிகமிருக்கும். மன அழுத்தம், பதற்றம், பூப்பெய்தும் காலம் போன்றவை அப்போக்ரைன் சுரப்பிகளைத் தூண்டுபவை.