டெங்குவை பரப்பும் கொசுக்கள், பகலில்தான் கடிக்கும். இவற்றை ‘பகல்நேரக் கொசுக்கள்’ என்றே சொல்லலாம். தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்கள், இந்தக் கொசுக்களுக்கு ஹனிமூன் ஸ்பாட். குறிப்பாக, நல்ல தண்ணீரில்தான் இவை வளரும். டெங்கு வைரஸில் மொத்தம் 4 திரிபுகள் உள்ளன. ஒருமுறை ஒருவருக்கு ஒரு திரிபால் பாதிப்பு ஏற்பட்டால், மீண்டும் அதே திரிபால் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. ஆனால், மற்ற மூன்று திரிபுகளும் அதே நபரைத் தாக்கலாம்.
டெங்கு, கொரோனா இரண்டுமே ஆபத்தானவைதான். என்றாலும், ஒரு வகையில் கொரோனா கொஞ்சம் பெட்டர். ஆம், அதற்காவது தடுப்பூசி வந்துவிட்டது. டெங்கு தடுப்பூசி, இப்போதுதான் அமெரிக்காவில் 9 முதல் 16 வயதினருக்குப் போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், அங்கீகரிக்கப்படவில்லை.
கொரோனாவோ… வேறெதுவுமோ… எந்த வகையான தொற்றுக்குள்ளானவர்களும் உடனடியாக இன்னொரு தொற்றுக்கு உள்ளாகும் நிலையில்தான் இருப்பார்கள். காரணம், அவர்களது உடலில் குறைந்துபோன நோய் எதிர்ப்பாற்றல் என்கிறார்கள் மருத்துவர்கள்.
வைரஸ்களுடன் வாழப் பழக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம்… ஆனால், பாதுகாப்புடனும் வாழவேண்டும் என்பதுதான் இதிலிருக்கும் சவால். ஆரோக்கியமாக வாழப் பழகிக்கொண்டாலே போதும், இதைவிட இன்னும் மிரட்டலான சவால்களையும் எளிதாகக் கடந்துவிட முடியும்.