கேரளாவில் நான்கு பேர், டெல்லியில் இரண்டு பேர் என, இந்தியாவில் இதுவரை 6 குரங்கு அம்மை நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் குரங்கு அம்மையின் முதல் உயிரிழப்பை, 22 வயது இளைஞரின் மரணத்தை தொடர்ந்து கேரளா உறுதிசெய்துள்ளது. இதுவே ஆசியாவின் முதல் குரங்கு அம்மை உயிரிழப்பு. மத்திய அரசு, குரங்கு அம்மை பரவலை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் செயல் குழு (Task Force) அமைத்துள்ளது. பொதுமக்கள் நலன் மற்றும் மருத்துவமனை ஏற்பாடுகள் சார்ந்த செயல்திட்டங்களையும் மத்திய – மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன.
குரங்கு அம்மை நோயைப் பொறுத்தவரை, மிக முக்கியமாகக் குறித்துக்கொள்ள வேண்டிய விஷயம்… பாதிக்கப்பட்டவர் நோயின் தீவிரத்தன்மைக்குப் போவதோ, உயிரிழக்க நேரிடுவதோ, வயது முதல் நோய் எதிர்ப்பு சக்திவரை சம்பந்தப்பட்டவரின் உடல்நிலை குறித்த மற்ற கூறுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ’நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம், எதிர்ப்பு சக்தியுடன் இருக்கிறோம்’ போன்ற நம்பிக்கைகளை எல்லாம் கோவிட்-19 அலைகள் அழித்து எழுதிக்காட்டியதை நினைவில்கொள்வோம்.
2020-ம் ஆண்டு ஐ.நா வெளியிட்ட அறிக்கை, விலங்குகளின் வாழ்விடங்களில் மனிதர்கள் அத்துமீறும் செயல் மற்றும் காலநிலை மாற்றங்களால், இனி வரும் காலங்களில் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு நோய்கள் அதிகமாகப் பரவயிருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டியது. அதற்கான தற்காப்பு, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கத்திய நாடுகளை பாதுகாக்கும் அக்கறையுடன் மட்டுமே மேற்கொள்ளாமல், இந்த நோய்களால் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் ஆப்பிரிக்க நாடுகளையும் மனதில் கொண்டு செய்ய வேண்டும்.
உலகம் எவ்வளவு சிறியது என்பதையும், நாடுகளின் வரைகோடுகளை அழித்து விளையாடும் பெருநோய்களை எதிர்கொள்ள நாம் எந்தளவுக்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதையும், குட்டியூண்டு கோவிட்-19 வைரஸ் நமக்குக் கற்பித்தது. இப்போது குரங்கு அம்மையின் வகுப்பறையில் இருக்கிறோம்.