
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்
தமிழ்நாடு முழுவதும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் சென்னை, கரூர், கோவை என சுமார் 40 இடங்களில் இன்று அதிகாலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
கரூர் மாவட்டம் இராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிற்கு வருமான வரித்துறையினர் வந்தபோது அங்கு கூடியிருந்த திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிகாரிகளுக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் நிலவியது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட திமுகவினர் பலரும் அங்கு கூடியிருந்தனர்.
இதில் வருமான வரித்துறையினரின் வாகனம் சேதத்திற்கு உள்ளானது. இதனால் சோதனையைத் தொடர முடியாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். சோதனையைத் தொடர முடியாமல் திரும்பிச் சென்ற அதிகாரிகள் கரூர் நகர காவல் நிலையத்திலும் மாவட்ட எஸ்.பி அலுவலகத்திலும் தஞ்சமடைந்தனர்.
பதிலளிக்க மறுத்த கே.என்.நேரு
வாகனம் சேதமடைந்தது தொடர்பாகவும் வருமான வரித்துறையினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதேபோல் காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் வருமான வரித்துறை வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஊடகங்களிடம் பேசிய கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், “வருமான வரித்துறையினர் காவல்துறை பாதுகாப்பு இன்றி சோதனைக்குச் சென்றுள்ளனர். சி.ஆர்.பி.எஃப் வீரர்களையும் அழைத்து வரவில்லை.
பொதுவாக வருமான வரித்துறையினர் சோதனைக்கு வருகின்றபோது காவல்துறையிடம் தகவல் தெரிவிப்பார்கள். ஆனால் இந்த முறை அவ்வாறு தகவல் தெரிவிக்கவில்லை. சோதனை தொடர்பாகத் தகவல் அறிந்ததும் பாதுகாப்பிற்கு காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்,” என்றார்.
“என் வீடுகளில் சோதனை நடக்கவில்லை”
இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை நடத்தி வரும் சோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். ஆனால், அவர் அதற்குப் பதில் சொல்ல மறுத்துவிட்டார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் கேட்டதற்கு தனக்கு ஏதும் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
வருமான வரித்துறையின் சோதனை தொடர்பாக டாஸ்மாக் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற செந்தில் பாலாஜியிடம் கேள்வியெழுப்பியபோது, “எனது சென்னை மற்றும் கரூர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை எதுவும் நடக்கவில்லை. எனது தம்பி, தெரிந்தவர்களுடைய வீடுகளில்தான் நடக்கிறது. அதைப் பற்றி நான் பேசுவது சரியாக இருக்காது,” என்று தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்தி, வாக்குவாதத்தில் திமுகவினர் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாகப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தவறு செய்யவில்லை என்றால் வருமான வரித்துறை அதிகாரிகளை எதற்காகத் தடுக்க வேண்டும்?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், “சோதனை செய்ய அனுமதிக்காதபோது அங்கு ஏதோ தவறு இருப்பதாகத் தெரிகிறது. நேர்மையாளர்களாக இருந்தால் அதிகாரிகளை அனுமதிக்க வேண்டும். வீட்டில் ஒன்றும் இல்லை என்றால் திறந்து காட்டிவிட வேண்டியதுதானே!” என்றும் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி மீது போடப்பட்ட வழக்கு
கோவை மாவட்டத்தில் 5 இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான செந்தில் கார்த்திகேயன் என்பவரின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. இவர் அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ‘வேலைக்கு பணம் பெற்ற’ வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. அமலாக்கத் துறையும் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், தற்போது இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
2014ஆம் ஆண்டில் போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர், நடத்துநர், இளநிலை உதவியாளர், இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆள் சேர்க்கை நடப்பதற்கான அறிவிப்பு வெளியானது. அதன் அடிப்படையில் ஆள்சேர்ப்பு நடைபெற்றது.
இந்தப் பணி நியமனங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட துறை அதிகாரிகள் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பலர் புகார் அளித்திருந்தனர்.
காவல்துறை உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.
2018ஆம் ஆண்டு மெட்ரோ போக்குவரத்துக் கழக தொழில்நுட்ப ஊழியரான அருள்மணி என்பவர் போக்குவரத்துக் கழகத்தில் வேலைகளைப் பெற்றுத் தர பலரிடம் லஞ்சம் பெற்றப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் மீது புகார் அளித்திருந்தார்.
வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் ஆட்சேர்ப்பு பட்டியல் வந்தபோது தங்களின் பெயர் வராததால் அதிருப்தியடைந்து புகார் அளித்துள்ளனர். முதல் கட்ட புகார்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம் சுமத்தப்படவில்லை. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் சேர்த்து லஞ்ச ஒழிப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டுமென வழக்கு தொடரப்பட்டது.
வழக்குகளை முறையாக விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
இதன் தொடர்ச்சியாக 2018ஆம் ஆண்டு இந்தப் புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது முதல் தகவல அறிக்கை பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன் விசாரணை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் 2021ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திமுகவில் இணைந்திருந்த செந்தில் பாலாஜிக்கு மின்சாரத் துறை அமைச்சர் பதவி தரப்பட்டது. தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2021ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி, செந்தில் பாலாஜி மீதான குற்றவியல் வழக்குகளை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
மனுவில் குற்றம்சாட்டப்பட்டவர் மற்றும் சாட்சியங்கள் 13 பேரும் சமரசத்தை எட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால் இந்த வழக்கின் விசாரணை நிறுத்தி வைக்கப்படுவதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்டுப்பாடுகள் விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அதே நேரம் பழைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிற உத்தரவை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால், சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மேல்முறையிடு செய்யப்பட்டது.
இவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுத்ததுடன் தமிழ்நாடு காவல்துறை முறையாக விசாரணை நடத்தி இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: