தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்ற கருத்தரங்கம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் ஆய்வு மாளிகையில் நடைபெற்றது. தமிழக வனத்துறையின் முதன்மை தலைமை வன பாதுகாவலர், வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்ற இந்த கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் பங்கேற்று வனங்களின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பேசுகையில், “நமது வனங்களில் களைச் செடிகள், அந்நியத் தாவரங்கள், காலி பாட்டில்கள் போன்றவற்றை அகற்ற மனித ஆற்றல் மற்றும் நிதி அதிகம் தேவைப்படுகிறது. இது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இருந்தால், இந்த நிதியை வளர்ச்சிப் பணிக்கு பயன்படுத்தலாம். இதனால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். வனத்தை அழித்தால் நாமும் அழிந்து விடுவோம். வனங்களைப் பாதுகாக்கவே நீதித்துறை உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது. மக்களிடம் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காலநிலை மாற்றத்தால் வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்படுகிறது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், அவற்றை சீரமைக்க வேண்டும்.