காப்புக் காட்டுக்குள் அத்துமீறி நடைபெறும் குதிரை சவாரி குறித்து நம்மிடம் பேசிய கூடுகள் அறைக்கட்டளையின் நிறுவனர் ஊட்டி சிவதாஸ், ” ஊட்டி நகரின் அருகில் இருக்கும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்தாலும் புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், காட்டுமாடு, கடமான் போன்ற பல்வேறு வகையான வன விலங்குகள் காணப்படுகின்றன. இந்த வனத்திற்குள் குதிரை சவாரி மேற்கொள்வதால் குதிரைகளின் எச்சங்கள் மூலம் வனவிலங்குகளுக்கு நோய் பரவும் அபாயம் இருக்கிறது. மேலும் வனவிலங்குகளால் சுற்றுலா பயணிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே இதுபோன்ற செயல்களை தடுக்க வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இந்த அத்துமீறல் குறித்து நீலகிரி கோட்ட வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தடையை மீறி காட்டுக்குள் குதிரைகள் மூலம் சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற நபர்களை கடுமையாக எச்சரித்திருக்கிறோம். தொடர் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகிறோம். அத்துமீறி குதிரை சவாரியில் ஈடுபடுபவர்கள் மீது வனச்சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.